பொதுத்தேர்வு மையங்களில் தலைமை ஆசிரியர்களை முதன்மைக் கண்காணிப்பாளராக நியமனம் செய்ய வேண்டும் என்று அரசு தேர்வுத்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் 13ம் தேதி தொடங்கி ஏப்ரல் 3ம் தேதி வரையும், பிளஸ்1 வகுப்புக்கு 14ம் தேதி முதல் ஏப்ரல் 5ம் தேதி வரையும், 10ம் வகுப்புக்கு ஏப்ரல் 6ம் தேதி தொடங்கி ஏப்ரல் 20ம் தேதி வரையும் நடத்தப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதேபோல் பொதுத்தேர்வு எழுதும் 10ம் வகுப்பு, பிளஸ்1, பிளஸ்2 மாணவ, மாணவிகளுக்கான செய்முறை தேர்வை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி இலக்கை எட்ட தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுத்தேர்வை எந்தவித புகார்கள் இன்றி நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்வு பணியில் ஈடுபடும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், கல்வித்துறை அதிகாரிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அரசு தேர்வு இயக்குனரகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் நடைபெறவுள்ள பிளஸ்2, பிளஸ்1 பொதுத் தேர்வுகளுக்கான தேர்வு மையங்களுக்கு அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளியில் பணிமூப்பில் முதுநிலையிலுள்ள முதுகலை ஆசிரியர் ஆகியோரை முதன்மைக் கண்காணிப்பாளர்களாக நியமனம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டு அரசு தேர்வுகள் இயக்குனர் சேதுராமவர்மா சுற்றறிக்கை அனுப்பி வைத்துள்ளார்.
No comments:
Post a Comment