அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, கடந்த ஆட்சியில் மடிக்கணினிகள் (லேப்டாப்) வழங்கவில்லை. அதையும் சேர்த்து தற்போது 14 லட்சம் பேருக்கு வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத்துறை வெளியிட்ட அறிக்கை தொடர்பாக பள்ளிக் கல்வித்துறையின் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அளித்த பேட்டி: 2016-2021ம் ஆண்டுகளில் அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை 3% குறைந்தது. அவர்கள் தனியார் பள்ளிகளில் சேர்ந்தனர். அரசுப் பள்ளிகளில் படிக்கும் மணவர்களுக்கு அதிக சலுகைகள் வழங்கக் கூடிய அரசு தற்போது இருக்கிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுத்த முயற்சியின் காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளில் 11 லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளைத் தேடி வந்துள்ளனர்.
எப்படி செயல்படக் கூடாது என்பதற்கு அதிமுக ஆட்சியும், எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு தற்போதைய ஆட்சியும் உதாரணம். அதிமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறையில் பல வீண் செலவுகள் செய்யப்பட்டுள்ளதை இந்திய கணக்குத் தணிக்கை அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது. திமுக அரசு அமைந்த பிறகு பள்ளி மாணவர்களுக்கு வழங்க வேண்டிய புத்தகப் பைகளில் அச்சிடப்படும் முதல்வரின் படத்துக்கு ரூ.13 கோடி செலவாகும் என்று தெரிவித்தபோது, ஏற்கெனவே உள்ள முதல்வரின் படமே இருக்கட்டும் என்றார் முதல்வர்.
நாகை மாவட்டத்தில் கொற்கை ஒன்றியத்தில் அம்மாசி என்கிற பட்டிலின பயனாளி வீடு பெற தகுதியான நிலையில் இருந்தம் அவருக்கு வழங்க வேண்டிய வீட்டை பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த செந்தில் குமார் என்பவருக்கு வழங்கி இருக்கிறார்கள். இந்த திட்டத்தில் மிகவும் அலட்சியமாக , கடந்த ஆட்சியில் செயல்பட்டுள்ளனர். ரூ.50 கோடிக்கும் மேலாக முறைகேடாக செலவு செய்யப்பட்டுள்ளது. இந்த முறைகேடு தொடர்பாக 6 அலுவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
புதிய அரசு வந்ததும் இந்த திட்டத்துக்காக நாம் ரூ.2492 கோடியை ஒன்றிய அரசிடம் இருந்து பெற்றுள்ளோம். கடந்த ஆட்சியில் தவறு செய்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற உறுதியோடு இந்த அரசு செயல்படுகிறது. அதேபோல பேரவையில் ஆதிதிராவிடர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது அதிமுக வெளிநடப்பு செய்தது. பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளுக்கு கட்டிடம் கட்ட பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், கடந்த 2 ஆண்டுகளில் ரூ.7500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. முதலில் ரூ.1400 கோடியும், அடுத்தகட்டமாக ரூ.1500 கோடியும் அந்த பணிகளுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது.
தொடக்கப் பள்ளிகளை பொறுத்தவரையில் பிப்ரவரி 1ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் வேலூர் மாவட்டத்தில் அடிக்கல் நாட்டினார். அதைத் தொடர்ந்து 185 ஊராட்சிகளில் கட்டடப் பணிகள் நடந்து வருகின்றன. பள்ளிகளில் கழிவறைகள் கட்ட வேண்டியது அவசியம். 18 ஆயிரம் வகுப்பறைகள் கட்டுவோம் என்று கூறித்தான் பேராசிரியர் அன்பழகள் பள்ளி மேம்பாட்டு திட்டம் கொண்டு வரப்பட்டது. அதனுடன் கழிப்பறைகளும் கட்டுவதில் உறுதியாக இருக்கிறோம். பெண்கள் பள்ளிகளில் விரைவாக கழிவறைகள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம். கடந்த இரண்டு ஆண்டுகளில் 11 லட்சம் மாணவ மாணவியர் அரசுப் பள்ளிகளை நோக்கி வந்துள்ளனர்.
முதல்வர் தற்போது டெல்லி செல்வது என்பது குடியரசுத்தலைவரை சந்தித்து, கிண்டியில் கட்டப்பட்டுள்ள மருத்துவமனை திறப்பு விழாவுக்கு அழைப்பதற்காகத்தான். அதிமுக ஆட்சியில் 515 பள்ளிகளை தரம் உயர்த்த பல விதிமுறைகள் உள்ளது. அதை அவர்கள் பின்பற்றவில்லை. அவற்றை சரி செய்யும் பணியில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம். பள்ளி மாணவர்களுக்கு கடந்த ஆட்சியில் முறையாக மடிக்கணினிகள் வழங்கப்படவில்லை. அதற்கு பிறகு கொரோனா காலம் வந்தது. தற்போது சீனாவிடம் இருந்து மடிக்கணினி வாங்குவதில் பல்வேறு தடைகள் இருக்கின்றன. இருப்பினும், இந்த திட்டத்தை நிறுத்தும் எண்ணம் அரசுக்கு இல்லை. கிட்டத்தட்ட 14 லட்சம் பேருக்கு தற்போது மடிக்கணினிகள் வழங்க வேண்டும். நிதி நிலையைப் பொறுத்து இந்த திட்டம் கண்டிப்பாக செயல்படுத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் 11 லட்சம் மாணவ மாணவியர் அரசுப் பள்ளிகளை நோக்கி வந்துள்ளனர்.





No comments:
Post a Comment