Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, June 5, 2023

'அரசு பஸ்களில் மாணவர்கள் கட்டணமின்றி பயணிக்கலாம்'

பள்ளிகள், வரும் 7ம் தேதி திறக்கப்படும் சூழலில், 'அரசு பஸ்களில், அடையாள அட்டையின்றி, மாணவர்கள் சீருடையில் கட்டணமின்றி பயணிக்கலாம்' என, கோவை மண்டல அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் கல்வி ஆண்டில் பள்ளி மாணவர்களுக்கான கட்டணமில்லா புதிய பஸ் பயண அட்டைகளுக்கான விபரங்கள் அச்சடித்து, லேமினேசன் செய்து வழங்குவதற்கான பணிகள் தற்போது நடக்கின்றன.அதனால், கோவையில் இயங்கும் அரசு டவுன், மப்சல் மற்றும் சிகப்பு நிற சிறப்பு பஸ்களில் பள்ளி சீருடைகளில், பள்ளி மாணவ, மாணவியர் பயணிக்கலாம் அல்லது கடந்தாண்டு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை பயன்படுத்தலாம்.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, அரசு இசைக்கல்லுாரி, அரசினர் கட்டட மற்றும் சிற்பக்கல்லுாரி, அரசு பல்தொழில்நுட்ப கல்லுாரி, அரசு பாலிடெக்னிக் மற்றும் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் படிப்பவர்கள், அக்கல்வி மையத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டை அல்லது அரசு போக்குவரத்துக்கழகத்தால் கடந்த கல்வியாண்டில் வழங்கப்பட்ட கட்டணமில்லா பஸ் பயண அட்டையை, நடத்துனர்களிடம் காண்பித்து அரசு பஸ்களில் பயணிக்கலாம்.அரசின் இந்த அறிவுறுத்தல்களை மீறி, மாணவ, மாணவியர் அடையாள அட்டை வைத்திருந்தும் மாணவர்களை பஸ்ஸில் இருந்து பயணிக்க அனுமதிக்காமல் இறக்கி விடப்பட்டால், அந்த நடத்துனர் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக கோவை கோட்டம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, கோவை மண்டல அரசு போக்குவரத்துக்கழக பொது மேலாளர் ஸ்ரீதரன் கூறுகையில், ''அரசு அறிவுறுத்தலின்படி, மாணவ, மாணவியர் அரசு பஸ்களில் கட்டணமின்றி பயணிக்கலாம்.

இதற்கென்று கால அவகாசம் நிர்ணயிக்கப்படவில்லை. கட்டணமில்லா பயண அட்டை வழங்கும் வரை இந்த சலுகை பொருந்தும். அதன் பின் இலவச பயண அட்டையை காண்பித்து பயணிக்கலாம்,'' என்றார்.

No comments:

Post a Comment