Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, March 1, 2025

தட்டச்சு, சுருக்கெழுத்து, கணக்கியல் தேர்வுகள்: அபராதத்துடன் விண்ணப்பத்தில் பிழை திருத்தம் - தொழில்நுட்பக் கல்வித் துறை அறிவிப்பு


தட்டச்சு, சுருக்கெழுத்து உள்ளிட்ட வணிகவியல் தேர்வுகளுக்கு விண்ணப்பித்தவர்கள் தங்கள் விண்ணப்பத்தில் ஏதேனும் பிழையை சரிசெய்ய விரும்பினால் அபராத கட்டணம் செலுத்தி இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்குள் நிவர்த்தி செய்துகொள்ளலாம் என தொழில்நுட்பக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தொழில்நுட்பக்கல்வி ஆணையரும், தொழில்நுட்பத்தேர்வுகள் வாரியத்தின் தலைவருமான ஜெ.இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள ஓர் அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

தட்டச்சு, சுருக்கெழுத்து, கணக்கியல் ஆகிய வணிகவியல் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களில் பிப்ரவரி 4-ம் தேதிக்கு பின்னர் அறிவிக்கப்பட்ட நேர்காணல்கள் மற்றும் தேர்வுகளை எதிர்கொள்வோர் தேர்வு மையங்களில் வெள்ளிக்கிழமை (இன்று) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை உரிய ஆவணங்களை சமர்ப்பித்து தங்கள் தேர்வு அணி மாற்றத்தை (எக்ஸாம் பேட்ஜ்) செய்துகொள்ளலாம்.

பிப்ரவரி 4-ம் தேதிக்கு முன்பு அறிவிக்கப்பட்ட நேர்காணல்கள் மற்றும் தேர்வுகளை மேற்கொள்வோர் தேர்வு அணி மாற்றம் தேவைப்பட்டால் 5 மடங்கு அபராத கட்டணத்தை தொழில்நுட்பக்கல்வி கூடுதல் இயக்குநர் பெயரில் டிமாண்ட் டிராப்ட் ஆக எடுத்து விண்ணப்பிக்க வேண்டும்.

தட்டச்சு இயந்திரம்: தட்டச்சு இயந்திர எண் மாற்றம் செய்ய எவ்வித கட்டணமும் செலுத்தாமல் தேர்வு மையங்களில் வெள்ளிக்கிழமை (இன்று) மாற்றிக்கொள்ளலாம். தேர்வு நடைபெறும்போது தட்டச்சு இயந்திரத்தில் பழுது ஏற்பட்டால் கட்டணம் செலுத்தாமல் தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளரிடம் கடிதம் சமர்ப்பித்து தட்டச்சு இயந்திரத்தை மாற்றிக்கொள்ளலாம்.

மேலும், வணிகவியல் தேர்வுகளுக்கு முழுமையாக சமர்ப்பித்த விண்ணப்பங்களில் ஏதேனும் விண்ணப்ப பிழையை சரிசெய்ய விரும்பினால் அதற்கு 5 மடங்கு கட்டணத்தை தொழில்நுட்பக்கல்வி இயக்ககத்தில் வெள்ளிக்கிழமை (இன்று) மாலை 4 மணிக்குள் செலுத்தி சரிசெய்துகொள்ளலாம். அதன்பிறகு தேர்வு மையங்களிலும், தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்திலும் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்பட மாட்டாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment