மொழிப்பாடங்களை ஒரே தாளாக ஒருங்கிணைத்தால் மாணவர்களுக்கு மன அழுத்தம் அதிகரிப்பதோடு அவர்களது படைப்பாற்றல் திறன் வெகுவாகப் பாதிக்கப்படும். எனவே, இது தொடர்பாக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ம.இராசேந்திரன் வலியுறுத்தினார்.
"மேல்நிலை வகுப்புகளில் ஒருங்கிணைந்த தமிழ்த் தேர்வு' என்ற தலைப்பிலான கருத்தரங்கம் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் முன்னாள் துணைவேந்தர் ம.இராசேந்திரன் பேசியது:-
மாணவர்கள் முழுமையான மொழித்திறன் பெறுவதற்கும் இலக்கிய அறிவு வாயிலாகப் பண்பாட்டு அறிவோடு ஆளுமை வளர்ச்சி பெறுவதற்கும் மொழிப்பாடங்களில் இருதாள்கள் இருப்பது அவசியம்.
தமிழை உச்சரிக்கவும், எழுதுவதற்கும் ஏற்கெனவே மாணவர்கள் தடுமாறி வருகின்றனர். இந்தநிலையில் இந்த அரசாணையை செயல்படுத்தினால் மேல்நிலை வகுப்புகளில் மொழிப்பாடத்தின் மீதுள்ள ஆர்வம் மாணவர்களுக்கு மேலும் குறையும். மொழித்திறன், படைப்பாற்றல், சிந்தனை வளம் ஆகிய மூன்றையும் மாணவர்களிடையே வளர்க்க மொழிப்பாடத்தில் கண்டிப்பாக இரு தாள்கள் இருக்க வேண்டும். எனவே இது தொடர்பாக அரசு பிறப்பித்த ஆணையை ரத்து செய்ய வேண்டும்.
தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் சங்க முன்னாள் தலைவர் இரா.சம்பத்குமார்: கடந்த 30 ஆண்டுகளில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு முடிவுகளால் ஏற்பட்ட தற்கொலைகளில் ஒரு மரணம் கூட மொழிப்பாடங்களால் நிகழவில்லை. இதுவரை எந்தவொரு மாணவரும் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிப்பாடங்கள் தங்களுக்கு சுமையாக இருந்தது, மன அழுத்தத்தை கொடுத்தது எனக் கூறியதில்லை.