JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Thursday, June 14, 2018

ஆதார் அட்டையில் வருகிறது அடுத்த அதிரடி : மத்திய அரசு புதிய திட்டம்




புதுடெல்லி: ஆதார் அட்டையில் முகத்தையும் அடையாளமாக ஏற்கும் நடைமுறை ஆகஸ்ட் 1-ம் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது. ஆதார் அட்டையில் தற்போது கண்களின் கருவிழிப்படலம், விரல் கைரேகைகள் ஆகியவை முக்கிய அடையாளமாக ஏற்கபட்டுள்ளன. இதில் வயோதிகம், விபத்து, கடின உழைப்பு உள்ளிட்ட காரணிகளால் ஆதாரை பயன்படுத்துவதில் அவ்வப்போது சிக்கல் ஏற்பட்டு வருகிறது.

இதனால் முகத்தையும் அடையாளமாக ஏற்கும் முறையை மத்திய அரசு பரிசீலித்து வந்தது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைமைச் செயல் அதிகாரி அஜய் பூஷன் பாண்டே முகப்பதிவு சார்ந்த அடையாள முறையானது ஏற்கனவே உள்ள வழிமுறைகளோடு கூடுதலாக ஒரு வழிமுறையை உருவாக்கி உள்ளதாக குறிப்பிட்டார்.


மேலும் தேவையின் அடிப்படையில் மட்டும் ஒருவருக்கு முக அமைப்பும் அடையாளமாக எடுத்துக்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.



முன்னதாக ஜூலை 1-ம் தேதி முதல் முக அடையாள முறை நடைமுறைக்கு வரும் என கூறப்பட்ட நிலையில் சிக்கலின்றி இந்த திட்டத்தை செயல்படுத்த கூடுதலாக ஒருமாதம் அவகாசம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். தற்போது வரை நாடு முழுவதும் 121 கோடிக்கும் மேற்பட்டவரிடம் ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர் நாள் தோறும் சராசரியாக 4 கோடி ஆதார் அட்டைகள் சரிபார்க்கும் பணிகள் நடந்துt வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.