Search This Blog

Wednesday, October 3, 2018

110 மாணவர்களை மாற்றக் கோரிக்கை!

0 comments
மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு தடை விதித்தது தொடர்பான வழக்கில், தங்கள் கல்லூரி மாணவர்கள் 110 பேரை வேறு கல்லூரிகளுக்கு மாற்றுமாறு தமிழக அரசைக் கேட்டுள்ளதாகத் தனியார் மருத்துவக் கல்லூரி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.



காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில், 2016-17ஆம் ஆண்டு துவங்கப்பட்ட பொன்னையா ராமஜெயம் மருத்துவக் கல்லூரியில் 110 மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். மருத்துவக் கவுன்சில் சுட்டிக்காட்டிய குறைகளை நிவர்த்தி செய்யாததால், 2017-18, 2018-19ஆம் ஆண்டுகளில் மாணவர் சேர்க்கை நடத்த இக்கல்லூரிக்குத் தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது.

இந்தியன் வங்கிக்கு 392 கோடி ரூபாய் கடன் பாக்கி வைத்துள்ளதால், இக்கல்லூரியின் சொத்துக்களை ஏலம் விடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கல்லூரியுடன் இணைந்த மருத்துவமனையும் மூடப்பட்டுள்ளதால், அங்கு படிக்கும் 110 மாணவர்களும் தங்களை வேறு கல்லூரிகளுக்கு மாற்றம் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.



இந்த வழக்கு நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனுவுக்குப் பதிலளித்த கல்லூரி நிர்வாகம், கல்லூரியை மூடுவது தொடர்பாக மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளதாகத் தெரிவித்தது. தற்போது கடும் நிதி நெருக்கடியைச் சந்தித்து வருவதால், தற்போது படிக்கும் 110 மாணவர்களை வேறு கல்லூரிகளுக்கு மாற்றத் தமிழக அரசைக் கேட்டுள்ளதாகவும் கூறியது. இதைக் கேட்ட நீதிபதி, இது தொடர்பான விசாரணையை வரும் 5ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.