Subscribe Us

Friday, December 28, 2018

புள்ளியியல் ஆய்வாளர் உள்ளிட்ட காலிப் பணியிடங்கள்: உத்தேச விடைகள் இன்று வெளியீடு

புள்ளியியல் ஆய்வாளர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களுக்கு நடந்த எழுத்துத் தேர்வுக்கான உத்தேச விடைகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட உள்ளன.





இதுகுறித்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் ஆர்.சுதன் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் கடந்த வாரத்தில் கட்டட வடிவமைப்பு உதவியாளர், திட்டப் பிரிவு உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு காலியிடங்களுக்கு தேர்வு நடத்தியது. இந்தத் தேர்வுக்கான உத்தேச விடைகள் தேர்வாணையத்தின் இணைய தளத்தில் (www.tnpsc.gov.in) வெள்ளிக்கிழமை (டிச. 28) வெளியிடப்படவுள்ளது.





கல்வி சார்ந்த விவரங்களை உடனுக்குடன் அறிய இணைந்திடுவீர்

Join Our WhatsApp Group Click Here

Join Our Facebook Page Click Here


உத்தேச விடைகளில் மறுப்பு ஏதேனும் இருந்தால், விண்ணப்பதாரர்கள் அதனை தேர்வாணையத்துக்குத் தெரிவித்து சரியான விடைகளைக் கோர முடியும். வினாத்தாள் குறித்த கோரிக்கைகள் இணைய வழியில் மட்டுமே பெறப்படும். தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்கள் மட்டுமே தேர்வுக்குரிய உத்தேச விடைகளை மறுத்து சரியான விடைகளைக் கோர முடியும்.
தேர்வர்கள் எந்த வரிசை கேள்வித்தாளை பயன்படுத்தி விடையளித்தாலும், தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள மாதிரி கேள்வித்தாள் வரிசையில் உள்ளபடி மட்டுமே தேர்வர்கள் உத்தேச விடைகளை மறுத்து சரியான விடைகளைக் கோர முடியும்.





விண்ணப்பதாரர்கள் தங்களது பதிவு எண், விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்ய வேண்டும். பதிவு எண், விண்ணப்ப எண், ஆகிய இரண்டும் தங்களது தேர்வுக்கூட நுழைவுச்சீட்டிலேயே இருக்கும்.
தேர்வர்கள் தேர்வு எழுதிய பாடத்தினை தேர்வு செய்து, பின்னர் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள கேள்வித்தாள் வரிசையில் உள்ளபடி வினா எண்ணை தெரிவு செய்தால் அதற்கான கேள்வி மற்றும் சரியான விடைக்குறிப்பு திரையில் தோன்றும்.





விடைக்குறிப்பின் விடைகளில் மாறுபட்ட கருத்து இருப்பின் அதன் கீழே தோன்றும் சரியான விடை அல்லது விடைகளை தேர்வு செய்ய வேண்டும். பின்னர் அதன் கீழே இருக்கும் குறிப்புப் பிரிவில் தேர்வர்கள் தங்களது கருத்துகளைப் பதிவு செய்யலாம். அதனைத் தொடர்ந்து தேர்வர்கள் தெரிவிக்கும் விடைகள் எந்தப் புத்தகத்தில் உள்ளது, அதன் ஆசிரியர், பதிப்பு வருடம், பதிப்பாளர், பக்க எண் ஆகிய தகவல்களை உள்ளீடு செய்ய வேண்டும்.
பின்னர், தேர்வர்கள் தெரிவித்த விடைக்கு வலுச்சேர்க்கும் உரிய ஆவணங்களைக் கோப்புக்களாகப் பதிவேற்றம் செய்யவேண்டும். தேர்வர்கள் தெரிவிக்கும் விடைகள் எந்தப் புத்தகத்தில் உள்ளன என்பதற்கான தகவல்களும் விடைக்கு வலுச்சேர்க்கும் உரிய ஆவணங்களும் இல்லாத கோரிக்கைகள் பரிசீலிக்கப்படமாட்டாது.





பதிவேற்றம் செய்தபின் அதற்கான ஒப்புகையினை அச்சிட்டுக்கொள்ளலாம். ஒருவர் எத்தனை விடைகளுக்கு வேண்டுமானாலும் மறுப்பு தெரிவிக்கலாம். கையால் எழுதப்பட்ட குறிப்புகள் விடைக்கான ஆதாரமாக கருதப்பட மாட்டாது.

தபால் அல்லது மின்னஞ்சல் மூலம் பெறப்படும் கோரிக்கைகள் எந்தக் காரணத்தை ஒட்டியும் கொண்டும் பரிசீலிக்கப்பட மாட்டாது என அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

Popular Feed