Search This Blog

Wednesday, February 13, 2019

ஆசிரியர் கோரிக்கை நிறைவேற்ற பரிந்துரை : பள்ளி கல்வி அதிகாரிகள் அறிக்கை

0 comments
பள்ளி கல்வித் துறை சீராக செயல்பட, 'ஜாக்டோ - ஜியோ'வின் நிதிச்சுமை இல்லாத கோரிக்கைகளை நிறைவேற்றும்படி, அரசுக்கு பள்ளி கல்வி அதிகாரிகள் பரிந்துரை அனுப்பியுள்ளனர்.தமிழகத்தில், அரசு ஊழியர்கள் மற்றும்ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோ சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி, பலகட்ட போராட்டங்கள் நடந்தன.

இதில், ஜன., 22 முதல், 30 வரை நடந்த, காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம், அரசு பணிகளை ஸ்தம்பிக்க வைத்தது. தொடக்க பள்ளிகள் முற்றிலும் முடங்கின.ஊதிய முரண்பாடுகளை சரி செய்வது, ஆறாவது சம்பள கமிஷன் பரிந்துரைப்படி, 21 மாதங்களுக்கான, ஊதிய உயர்வு நிலுவை தொகை வழங்குவது, பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வது உட்பட, ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த போராட்டம் நடந்தது. ஆனால், அரசு எடுத்த அதிரடி நடவடிக்கைகளால், போராட்டம் முடிவுக்கு வந்தது.இருப்பினும், அரசு தரப்பில் எந்த பேச்சும் நடத்தாமல், வேலை நிறுத்தத்தை முடிக்க வைத்ததால், ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் அதிருப்தியில் உள்ளனர்.நிதிச்சுமை இல்லாத கோரிக்கைகளையாவது நிறைவேற்ற வேண்டும் என, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை, தனித்தனியே சந்தித்து மனு அளித்தனர்.

இதைத் தொடர்ந்து, அரசு பள்ளிகள் சீராக இயங்கும் வகையில், சில குறைந்த பட்ச கோரிக்கைகளையாவது நிறைவேற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.தமிழக தொடக்க கல்வி மற்றும் பள்ளி கல்விஅதிகாரிகள், ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஆய்வு செய்து, அரசுக்கு பரிந்துரை அனுப்பியுள்ளனர்.அதில், 2003 - 04ல், பல்வேறு கட்டங்களில், தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் பணி காலத்தை, பணியில் சேர்ந்த நாள் முதல், வரன்முறை செய்யலாம். ஆசிரியர்கள், அரசு பணியாளர்களின் ஊதிய முரண்பாடுகளை, நிதிச்சுமை இல்லாமல் சரி செய்யலாம் என்பது உட்பட, பல பரிந்துரைகள் இடம் பெற்றுள்ளன.