ஒரே நாளில் 3 நுழைவு தேர்வுகள்

எதை எழுதுவது, விடுவது என தவிப்பு
சென்னை:உயர் கல்வி செல்வதற்கான, மத்திய அரசின், மூன்று நுழைவு தேர்வுகள், வரும், 26ம் தேதி நடப்பதால், மாணவர்கள் தவிப்புக்கு ஆளாகிஉள்ளனர்.
பிளஸ் 2 முடித்த மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர்வதற்கான, எய்ம்ஸ் மருத்துவ நுழைவு தேர்வு, வரும், 25 மற்றும் 26ம் தேதிகளில் நடக்கிறது.

இந்த தேர்வு காலை, மாலை என, இரண்டு வேளையும் நடக்கிறது. கணினி முறையில், மூன்றரை மணி நேரம் தேர்வு நடத்தப்படுகிறது.தேர்வு துவங்குவதற்கு, ஒன்றரை மணி நேரத்துக்கு முன், தேர்வு மையங்களுக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆடை மற்றும் ஆபரண கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது.அதேபோல், பிளஸ் 2 முடித்த மாணவர்கள், மத்திய பல்கலை, சென்னையில் உள்ள பொருளியல் கல்லுாரி மற்றும் கோவை மத்திய ஜவுளி தொழில்நுட்ப நிறுவனம் படிப்புகளில் சேர, 'கியூசெட்' என்ற, நுழைவு தேர்வை எழுத வேண்டும். இந்த தேர்வும், வரும், 25 மற்றும் 26ம் தேதிகளில் நடக்கிறது.


இது தவிர, தேசிய சட்ட பல்கலை இணைப்பில் உள்ள, சட்ட கல்லுாரிகளில் சேர்வதற்கான, 'கிளாட்' நுழைவு தேர்வும், வரும், 26ம் தேதி பிற்பகலில் நடத்தப்படுகிறது.இந்த தேர்வு, ஏற்கனவே, மே, 12ல் நடப்பதாக இருந்தது. பின், 26ம் தேதிக்கு, திடீரென மாற்றப்பட்டுள்ளது.இப்படி, மூன்று மத்திய நுழைவு தேர்வுகளும், ஒரே நாளில் நடத்தப்படுவதால், மாணவர்கள், கடும் குழப்பம் அடைந்துஉள்ளனர்.மூன்று தேர்வுகளுக்கும் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

எதில், அதிக மதிப்பெண் மற்றும் தரவரிசை கிடைக்கிறதோ, அந்த படிப்பில் சேரலாம் என்ற நம்பிக்கையில், மாணவர்கள் விண்ணப்பம் அளித்துள்ளனர்.ஆனால், ஒரே நாளில், மூன்று தேர்வுகளையும் நடத்துவதால், எந்த தேர்வை எழுதுவது, எந்த இரண்டு தேர்வுகளை விடுவது என தெரியாமல், மாணவர்கள் தவித்து வருகின்றனர். எனவே, தேர்வு தேதியை மாற்ற கோரிக்கை விடுத்துள்ளனர்.
Share:

Subscribe Us

Total Pageviews

Thamizhkadal WhatsApp Channel

Categories