Friday, May 31, 2019

பி.இ. கலந்தாய்வு: விண்ணப்பிக்க இன்று கடைசி

பொறியியல் சேர்க்கைக்கான ஆன்-லைன் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க வெள்ளிக்கிழமை (மே 31) கடைசி நாளாகும். வியாழக்கிழமை மாலை வரை 1 லட்சத்து 28 ஆயிரம் பேர் விண்ணப்பத்தைப் பதிவு செய்துள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழகத் துறைகள், உறுப்புக் கல்லூரிகள் மற்றும் 500-க்கும் அதிகமான இணைப்புப் பொறியியல் கல்லூரிகளில் உள்ள 1.75 லட்சம் அரசு ஒதுக்கீட்டு பி.இ., பி.டெக். இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான ஆன்-லைன் கலந்தாய்வை இந்த ஆண்டு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் நடத்துகிறது.


மாற்றுத் திறனாளிகள், விளையாட்டுப் பிரிவினர், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் போன்ற சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூன் 20-ஆம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு ஜூலை 3-ஆம் தேதி தொடங்கி ஜூலை 28-ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.
இதற்கான ஆன்-லைன் விண்ணப்பப் பதிவு மே 2-ஆம் தேதி தொடங்கியது. இதற்கு மாணவர்கள் ஆர்வமுடன் விண்ணப்பித்தனர். முதல் நாளிலேயே 15 ஆயிரம் பேர் பதிவு செய்திருந்தனர். விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வெள்ளிக்கிழமையுடன் முடிவடைய உள்ள நிலையில், வியாழக்கிழமை மாலை வரை 1 லட்சத்துக்கு 28 ஆயிரம் பேர் விண்ணப்பத்தைப் பதிவு செய்துள்ளனர்.


விண்ணப்பித்த மாணவர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் பி.இ. இடங்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், அனைவருக்கும் இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தொழில்நுட்பக் கல்வி இயக்குநரக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Popular Feed

Recent Story

Featured News