Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, May 14, 2019

சிறப்புத் துணைத் தேர்வுகளுக்கான பணிகள்: ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் ரத்து

சிறப்பு துணைத் தேர்வுக்கான பதிவுப் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு அளிக்கப்படும் ஊக்க ஊதியத்தை தேர்வுத் துறை ரத்து செய்துள்ளதால் பதிவுப் பணிகளை மேற்கொள்ளும் சேவை மையங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுக்கு விண்ணப்பித்து, தேர்வில் பங்கேற்காத மாணவர்களுக்கு வரும் ஜுன் மாதம் சிறப்புத் துணைத் தேர்வுகள் நடைபெறவுள்ளன. சில பாடங்களில் தேர்ச்சி பெறாதவர்களும், இந்த சிறப்பு துணைத் தேர்வில் பங்கேற்கலாம். இதற்கான ஆன்லைன் பதிவுகள், அரசு தேர்வுத்துறை சேவை மையங்களில் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த சேவை மையங்கள், அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளில் அமைக்கப்படுகின்றன.


சிறப்புத் துணைத் தேர்வை எழுத விரும்பும் மாணவர்கள் இந்தப் பள்ளிகளுக்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். மாணவர்களுக்கான விண்ணப்பத்தை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். அவர்களின் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து, தேர்வுத்துறை இணையதளத்தில் பதிவேற்றுவது, தேர்வு கட்டணத்தை மாணவர்களிடம் வசூலிப்பது, மாணவர்களின் சுய விவரங்களை கணினியில் பதிவு செய்வது போன்ற பணிகளை, சேவை மையங்களில் உள்ள ஆசிரியர்கள் மேற்கொள்வர். விடுமுறையில் உள்ள சில ஆசிரியர்கள் இந்த பணிகளில் சேவை அடிப்படையில் ஈடுபடுத்தப்படுவர். இதற்காக அவர்களுக்கு, விண்ணப்பங்களின் எண்ணிக்கை அடிப்படையில் ஊக்க ஊதியம் வழங்கப்படும்.


விண்ணப்பிக்கும் மாணவர்களிடம் ஆன்லைன் பதிவுக்காக ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படும். அதில் ரூ.30 ஆசிரியர்களின் ஊக்க ஊதியத்துக்காகவும், ரூ.20 பள்ளிக் கல்வி அலுவலகத்தின் போக்குவரத்து, அலுவலகப் பணிகளுக்கும் ஒதுக்கப்படும். இந்நிலையில், மாணவர்களிடம் வசூலிக்கும் ஆன்லைன் கட்டணத்தை முழுமையாக தேர்வு துறையில் செலுத்த வேண்டும் என தேர்வு துறை இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக விடுமுறை நாள்களில் பணிக்கு வரும் ஆசிரியர்களுக்கு, ஊக்க ஊதியம் வழங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இப் பிரச்னையால் விடுமுறையில் உள்ள ஆசிரியர்கள் அரசு தேர்வு மையங்களின் பணிக்கு வர மறுத்துள்ளதால், பல மையங்களில் தலைமை ஆசிரியர்களே அமர்ந்து தேர்வு பதிவு பணிகளை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.