JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Friday, May 17, 2019

TET தேர்வு காரணமாக ஜூன் 8 அன்று நடக்க இருந்த பி.எட் தேர்வு தேதி மாற்றம்: உயர்கல்வித்துறை அறிவிப்பு

ஆசிரியர் தகுதித் தேர்வு (டெட்) ஜூன் 8- ஆம் தேதி நடைபெற இருப்பதால், அதே தேதியில் நடைபெற இருந்த பி.எட்., இறுதியாண்டு தேர்வானது ஜூன் 13-ஆம் தேதி பிற்பகலுக்கு மாற்றப்பட்டுள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வு ஜூன் 8, 9 தேதிகளில் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது.

ஜூன் 8-ஆம் தேதி முதல் தாள் தேர்வும், ஜூன் 9-ஆம் தேதி இரண்டாம் தாளுக்கான தேர்வு நடைபெற உள்ளது. முன்னதாக, பி.எட். இறுதியாண்டு தேர்வு ஜூன் 8-ஆம் தேதி தொடங்கி நடைபெறும் என தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் அறிவித்திருந்தது. இந்த நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வை எழுத இப்போது பி.எட். இறுதியாண்டு படித்து வரும் மாணவர்களும் விண்ணப்பித்திருப்பார்கள் என்பதால், அந்த மாணவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வை எழுத முடியாத சூழல் உருவானது. இதன் காரணமாக, பி.எட். இறுதியாண்டு தேர்வு தேதியை மாற்றியமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.


இந்த கோரிக்கையை ஏற்று, ஜூன் 8-ஆம் தேதி நடைபெற இருந்த பி.எட். இறுதியாண்டு தேர்வை, ஜூன் 13-ஆம் தேதிக்கு மாற்றி உயர்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக, மாணவர்கள் சிக்கலின்றி டெட் தேர்வை எழுதும் வாய்ப்பு உருவாகியுள்ளது.