JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Sunday, November 10, 2019

8, 9, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நிதி சார்ந்த கல்வியறிவு திட்டத்தில் பாடபுத்தகம் இல்லை: இந்த ஆண்டும் சிடிக்கள் உதவியுடன் பாடம் நடத்த முடிவு


நாகர்கோவில்: நிதி சார்ந்த கல்வியறிவு திட்டத்தில் அரசு மற்றும் நிதி உதவி பெறும் பள்ளிகளில் 8, 9, 11, 12ம் வகுப்புகளில் பாட புத்தகங்கள் அச்சிடுவது நிறுத்தப்பட்டு இந்த ஆண்டும் சிடிகள் உதவியுடன் பாடம் நடத்தப்படுகிறது. தேசிய பங்கு சந்தை நிறுவன இணை மேலாண்மை இயக்குநர் பள்ளிகளில் 8, 9, 11, 12ம் வகுப்புகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு நிதி சார்ந்த கல்வி அறிவு அளிக்கும் திட்டம் குறித்து பள்ளி கல்வி இயக்குநருக்கு பரிந்துரை செய்தார்.



அதன் ஒரு பகுதியாக 8,9,11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்களை அச்சிடுவதை நிறுத்திக்கொண்டு அதற்கு மாற்று வழியாக குறுந்தகடு (CD) மூலம் பாடத்திட்டத்தை ஆசிரியர்களுக்கு வழங்கி பாடத்தை நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. இக்கல்வியாண்டிலும் நிதி சார்ந்த கல்வியறிவுத் திட்டத்தில் உள்ள வகுப்பு மாணவர்களுக்கு பாடப்புத்தகத்தைக் கொண்டு நடத்துவதற்குப் பதிலாக (CD) மூலம் கணினி வழியாக பாடத்தை நடத்திடவும், இதற்கான சிடி, முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



இது தொடர்பாக பள்ளி கல்வி இயக்குநர் கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைத்துள்ள சுற்றறிக்கையில், 'நிதி சார்ந்த கல்வி பாடத்தை 8, 9,ம் வகுப்புக்கு ஆங்கிலம் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பாட வேளைகளுக்கு பதிலாகவும், 11, 12ம் வகுப்பிற்கு வணிகவியல் மற்றும் பொருளியல் பாட வேளைகளுக்கு பதிலாகவும், நடைமுறைப்படுத்திட வேண்டும். 11 மற்றும் 12ம் வகுப்பிற்கான 6 செய்முறை பாட வேளைகளை ஜனவரி 2020ல் நடத்த வேண்டும். ஜனவரி மாதத்தில் இப்பாடத்தில் 8, 9, 11, 12ம் வகுப்புகளுக்கு தேர்வு நடத்த தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரைகள் வழங்கிட கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.