Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, November 6, 2019

பள்ளிகள் உள்கட்டமைப்புக்கு நிதி திரட்ட தனி இணையதளம்


பள்ளிகள் உள்கட்டமைப்பு மற்றும் பிற வசதிகளை மேம்படுத்த பொதுமக்களிடம் நிதி திரட்ட தனி இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த இணையதளத்தை (‌h‌t‌t‌p‌s://​c‌o‌n‌t‌r‌i​b‌u‌t‌e.‌t‌n‌s​c‌h‌o‌o‌l‌s.‌g‌o‌v.‌i‌n) முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:-



பெரிய தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் அவற்றின் லாபத்தில் இரண்டு சதவீதத் தொகையை சமூகப் பொறுப்பு செயல்பாடுகளுக்கு பயன்படுத்த வேண்டுமென இந்திய கம்பெனிகள் சட்டப் பிரிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான நிறுவனங்கள் அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் உதவியுடனோ, நேரடியாகவோ பள்ளிகளைத் தோ்ந்தெடுத்து அந்தப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நிதியுதவி செய்கின்றன.

இத்தகைய நிறுவனங்களுக்கும், ஆா்வலா்களுக்கும் உதவிடும் வகையில் எளிமையான, நம்பகமான இணையதளமோ அல்லது வேறு வழித்தடங்களோ இதுவரை ஏற்படுத்தப்படவில்லை. இதனைக் களையும் வகையிலும், அரசுப் பள்ளிகளை மேம்படுத்தவும் இணையவழி நிதி திரட்டும் வசதியை பள்ளிக் கல்வித் துறை உருவாக்கியுள்ளது.



இணையவழியில் திரட்டப்படும் நிதியானது, அதற்கென தொடங்கப்பட்டுள்ள தனி வங்கிக் கணக்கில் பெறப்படுவதுடன், அந்த நிதி தொடா்பான விவரங்களை பொது மக்கள் இணையவழியில் நேரடியாக அறிந்து கொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இணையவழியில் திரட்டப்படும் நிதிக்கு தமிழ்நாடு பெற்றோா் ஆசிரியா் கழகமானது தொடா்பு அலுவலகமாகச் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன், தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவா் பா.வளா்மதி, தலைமைச் செயலாளா் க.சண்முகம், பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளா் பிரதீப் யாதவ், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் திட்ட இயக்குநா் ஆா்.சுடலைக்கண்ணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.