Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, January 7, 2020

பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கான 10% இட ஒதுக்கீடு குறித்து மாநில அரசுகளே முடிவெடுக்கலாம்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்


டெல்லி : பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான 10சதவீத கூடுதல் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான விவகாரத்தில் அந்தந்த மாநில அரசுகளே முடிவுகளை மேற்கொள்ளலாம் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.




நாடாளுமன்றத்தில் சட்டமான 10% இட ஒதுக்கீடு

நாட்டின் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின வகுப்பை சேர்ந்தவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில் கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு அளிக்கும் சட்டம் நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு கூடுதலாக செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இதையடுத்து அது நாடாளுமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றப்பட்டது.

உச்சநீதிமன்றத்தில் மனு




இந்நிலையில், 10% இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு ஒரு புதிய மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில்,பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்காக கூடுதலாக 10சதவீத இடஒதுக்கீடு சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. ஆனால் இதனை இன்னும் தமிழகம் மற்றும் கர்நாடகத்தில் நடைமுறைக்கு கொண்டு வராமல் மாநில அரசுகள் கால தாமதம் செய்து வருகிறது. அதனால் உடனடியாக நடைமுறைப் படுத்த மத்திய, மாநில அரசுகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். மேலும் கூடுதலாக 10% இடஒதுக்கீட்டை அமலுக்கு கொண்டு வரும் போது ஏற்கனவே தமிழகத்தில் உள்ள 69% இடஒதுக்கீட்டுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படாதவாறு தனி சட்டமும் இயற்றிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.




மத்திய அரசு பதில் மனு தாக்கல்

இதையடுத்து மனுவை விசாரித்த நீதிமன்றம் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கில் தமிழக அரசு தரப்பில் கடந்த ஆண்டு நவம்பர் 22ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில்,பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கான 10% இட ஒதுக்கீடு குறித்து மாநில அரசுகளே முடிவெடுக்கலாம். இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட முடியாது.10%இடஒதுக்கீட்டு முறையை பொருத்தமட்டில் தனது அதிகாரத்திற்கு உட்பட்டு அதன் கீழ் இருக்கும் துறைகளில் மட்டும் தான் மத்திய அரசு தனது செயல்பாட்டை நடைமுறைப்படுத்தியுள்ளது என மனுவில் மத்திய அரசு தெரிவித்துள்ளது