சென்னை: அதிகமாக டீக்குடிப்பது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும்... ஒரு நாளைக்கு சராசரியாக இரண்டு கப் டீ குடிப்பது போதுமானது. அதற்கு அதிகமாக டீ குடிப்பதும் அடிக்கடி டீ குடிக்க பழகி கொள்வதும் உடல் நலத்திற்கு மிகுந்த கேடு விளைவிக்கும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இன்றைய காலகட்டத்தில் தண்ணீர் பருகுவதைத் தொடர்ந்து அதிக அளவில் மக்கள் பருகுவது டீ என்பது குறிப்பிடத்தக்கது. டீ குடிப்பது மக்கள் பலரின் அன்றாட பழக்கமாகவும், பொழுதுபோக்காகவும் உள்ளது.
அலுவலகத்தில் பணிபுரியும் நபர்கள் டீ குடிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். ஒரு குறிப்பிட்ட நேரம் வந்தால், அந்த நேரத்தில் அவர்களுக்கு டீ குடித்தால் தான் பணி செய்ய முடியும் என்ற மனநிலைக்கு கூட செல்கின்றனர்.
அதிக அளவில் டீ குடிப்பதால், அதில் இருந்து வெளியாகும் அதிக அளவிலான நச்சுக்களால் கவன சிதறல், அமைதியில்லாமல் போவது, உறக்கம் கெடுதல், நிலையில்லாத ஒரு தன்மை உருவாகி மனம் அலை பாய்ந்துக்கொண்டே இருக்கும். டீ அதிக அளவில் குடித்தால் அதிலுள்ள டானிஸ் வேதிப்பொருள், உடலில் இரும்புச்சத்து சேராமல் தடுக்கும் தன்மை கொண்டது.