
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில் கோடை விடுமுறை கடந்தும், பள்ளிகளின் விடுமுறை நீண்டுகொண்டே செல்கிறது. தொற்று பாதிப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததை அடுத்து தொற்று பாதிப்புக்குள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மையமாகவும் , தனிமைப்படுத்தும் மையமாகவும் சில பள்ளி, கல்லூரிகள் மாற்றப்பட்டுள்ளன.
இதனிடையே மாணவர்களின் கற்றலில் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டு, பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. தொலைக்காட்சி மூலமாகவும் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.
பள்ளிகள் எப்போது திறக்கப்படும்? அதுகுறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும் ? என பெற்றோரும், மாணவர்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்தநிலையில் தமிழகத்தில் நவம்பர் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என்று கல்வித்துறை தெரிவித்துள்ளதாக சமூக ஊடகங்களில் வேகமாக தகவல் பரவியது.
இந்நிலையில், நவம்பர் மாதத்தில் பள்ளிகள் திறப்பு என்று சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்தி தவறானது. கொரோனா சூழ்நிலை சரியானதும் பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் பழனிசாமி அறிவிப்பார் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது ; பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை தொடர்பாக வரும் 10 - ம் தேதி முதல்வர் பழனிசாமி அறிவிப்பார். கொரோனா தொற்று பரவல் குறைந்த பிறகே பள்ளிகள் திறப்பு பற்றி முடிவு செய்யப்படும் என்றும் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.



No comments:
Post a Comment