Thursday, August 27, 2020

பள்ளி செல்லா குழந்தைகள் விரைவில் கணக்கெடுப்பு: செங்கோட்டையன்

கோபி: ''தமிழகத்தில், பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு, 15 நாட்களில் துவங்கும்,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் கூறினார். ஈரோடு மாவட்டம், நம்பியூரில், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகத்தில், 'நீட்' தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதுதான், முதல்வரின் கொள்கை. அதுதான் அரசின் கொள்கை என்பதில், நாங்கள் தெளிவாக இருக்கிறோம். 

தமிழகத்தில், அரசுப் பள்ளிகளில் இதுவரை, 2.35 லட்சம் மாணவர்கள் கூடுதலாக சேர்க்கையாகி உள்ளனர். இது மேலும் அதிகரித்து, நடப்பு கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில், 2.75 லட்சம் மாணவர்கள் சேர்க்கையாக வாய்ப்புள்ளது.தனியார் பள்ளிகளில், அதிக கட்டணம் வசூலிப்பது குறித்து, அந்தந்த மாவட்ட, சி.இ.ஓ., மற்றும் டி.இ.ஓ.,விடம், பெற்றோர் புகார் அளித்தால், உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ஆண்டுதோறும் நடக்கும், பள்ளி செல்லா குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பு, தற்போது மாணவர் சேர்க்கை நடந்து வருவதால், 15 நாட்களில் துவங்கும்.தமிழகத்தில், கொரோனா தொற்று சராசரியாக தினமும், 5,000க்கும் அதிகமாகவே உள்ளது. இதன் தாக்கம் குறைந்த பின்பே, பள்ளிகள் திறப்பு குறித்து அரசு பரிசீலிக்கும். தற்போதைய சூழலில், பள்ளிகள் திறக்கும் சாத்தியக்கூறுகள் இல்லை. இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News