Search This Blog

Friday, October 30, 2020

TRB - தேர்வில் முறைகேடு செய்த 196 பேர் பயோடேட்டா வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்!

0 comments
அரசு பாலிடெக்னிக் கல்லுாரி விரிவுரையாளர் பணிக்கான தேர்வில், முறைகேட்டில் ஈடுபட்ட, 196 பேருக்கு, அரசு பணியில் சேர, வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர்களின் பெயர் விபரங்களை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில், 1,060 விரிவுரையாளர் காலியிடங்களை நிரப்ப, 2017ல் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், போட்டி தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு முடிவுகள் வெளியான போது, தேர்வை சரியாக எழுதாத, 196 பேர் தேர்ச்சி பட்டியலில் முன்னிலை பெற்றனர். இதுகுறித்து, தேர்வர்கள் பலர் சந்தேகம் எழுப்பியதுடன், அவர்களின் விடைத்தாள் மற்றும் மதிப்பெண் விபரங்களை திரட்டியதில், 196 பேரும், பல லட்சம் பணம் கொடுத்து முறைகேடாக மதிப்பெண்கள் பெற்றது தெரியவந்தது.

இதுதொடர்பாக, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், ஆசிரியர் தேர்வு வாரியம் புகார் அளித்தது. விசாரணையில், கணினி ஆப்பரேட்டர் வழியாக, மதிப்பெண்களை மட்டும் கூடுதலாக பதிவு செய்து, மோசடி செய்தது தெரியவந்தது.இந்த விவகாரம், உச்சநீதிமன்றம் வரை சென்ற நிலையில், புதிதாக தேர்வை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, முறைகேட்டில் ஈடுபட், 196 பேர், வாழ்நாள் முழுதும் அரசு பணிக்கான தேர்வு எழுத, தடை விதிக்கப்பட்டது.இந்நிலையில், 196 பேரின் பெயர், முகவரி, கல்வி தகுதி, ஜாதி மற்றும் பிறந்த தேதி உள்ளிட்ட விபரங்களை, ஆசிரியர் தேர்வு வாரியம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

அவர்களில், 154 பேர் இன்ஜினியரிங் பட்டதாரிகள்; மற்றவர்கள் கலை, அறிவியல் படித்தவர்கள். மொத்தம், 196 பேரில், 58 பேர் பெண்கள்.தடை செய்யப்பட்டவர்களின் முகவரிகள் அடிப்படையிலான பட்டியலில், மதுரை, துாத்துக்குடி, தென்காசி, செங்கல்பட்டு, நீலகிரி, பெரம்பலுார் ஆகிய மாவட்டங்களை தவிர, மற்ற அனைத்து மாவட்டங்களை சேர்ந்தவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

சேலம், கோவை, திருச்சி, அரியலுார், திண்டுக்கல், தேனி, சென்னை, நாமக்கல், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அதிக அளவில் இடம் பெற்றுள்ளனர்.

No comments:

Post a Comment