JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Wednesday, December 9, 2020

அரையாண்டு தேர்வு ரத்து பள்ளி கல்வித்துறை முடிவு

பள்ளிகளை இன்னும் திறக்க முடியாததால், காலாண்டு தேர்வு மட்டுமின்றி, தற்போது, அரையாண்டு தேர்வையும் ரத்து செய்ய, பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. 

கொரோனா தொற்று காரணமாக, நாடு முழுதும் மார்ச்சில் பள்ளிகள், கல்லுாரிகள் மூடப்பட்டன. ஒன்று முதல், 10ம் வகுப்பு வரை தமிழகத்தில், ஆண்டு இறுதி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் அடிப்படையில், தேர்ச்சி அறிவிக்கப்பட்டு, மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட்டது.பிளஸ் 1க்கு ஒரு தேர்வு ரத்து செய்யப்பட்டது. 

பிளஸ் 2வுக்கு மட்டும், அனைத்து தேர்வுகளும் நடத்தப்பட்டன. கொரோனா தொற்று தொடர்ந்து பரவி வந்ததால், பள்ளிகளை திறந்து வகுப்புகளை நேரடியாக நடத்த, தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை. எனவே, தனியார் பள்ளிகளில், ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அரசு பள்ளிகளுக்கு கல்வி, 'டிவி' வழியே வீடியோ பாடங்கள் நடத்தப்படுகின்றன. 

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான காலாண்டு தேர்வுகள் நடத்தப்படவில்லை. தனியார் பள்ளிகள் ஆன்லைனில் தேர்வுகளை முடித்துள்ளன.இதையடுத்து, இந்த மாதம் நடக்க உள்ள அரையாண்டு தேர்வுகளையும் ரத்து செய்ய, பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. வழக்கமாக, வரும், 14ம் தேதி முதல் அரையாண்டு தேர்வுகள் நடத்தப்பட வேண்டும். 

பள்ளிகள் திறக்கப்படாததால், தேர்வுகளை நடத்த வேண்டாம் என, அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தி உள்ளனர். தனியார் பள்ளிகள் மட்டும், விருப்பம் உள்ள மாணவர்களுக்கு, இதுவரை நடத்தப்பட்ட பாடங்களுக்கு மட்டும், மாதிரி தேர்வாக நடத்தி கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment