கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் 9 மாதமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. மாணவர்கள் வீட்டில் இருந்து ஆன்-லைன் வழியாகவும், தொலைக்காட்சி மூலமாகவும் படித்து வருகிறார்கள். இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து விட்டதால் அனைத்து கட்டுப்பாடுகளும் படிப்படியாக தளர்வு செய்யப்பட்டு வருகின்றன.
அதனால் பொங்கலுக்கு பிறகு 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளை திறப்பது குறித்து பெற்றோரிடம் கருத்து கேட்கப்பட்டது. கடந்த 2 நாட்களாக 12 ஆயிரம் பள்ளிகளில் பொங்கலுக்கு பிறகு பள்ளிகளை திறப்பதா? வேண்டாமா? என விருப்பத்தை கேட்டறிந்தனர்.
அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், தலைமை ஆசிரியர்கள் மூலமாக கடிதம் மூலமாகவும், வாய்மொழியாகவும் விருப்பத்தை கேட்டறிந்தனர். அனைத்து மாவட்டங்களில் இருந்து முதன்மை கல்வி அதிகாரிகள் மூலமாக பெற்றோர்களின் கருத்துக்கள் பள்ளி கல்வி இயக்குனர் எஸ்.கண்ணப்பனுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் இன்று மாலை வரை கருத்துக்கள் பெறப்படுவதற்கு அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இதுவரையில் கருத்து பெறப்படாத பள்ளிகளில் இருந்து மாலையில் இறுதி செய்யப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பெற்றோர்களின் விருப்பத்தை அரசுக்கு பள்ளிக் கல்வித்துறை அறிக்கையாக நாளை சமர்பிக்கிறது.
No comments:
Post a Comment