Search This Blog

Tuesday, February 2, 2021

இந்திய அளவில் சிஏ தேர்வில் முதலிடம்: சேலம் மாணவர் சாதனை

0 comments
அகில இந்திய அளவில் சிஏ தேர்வில் முதல் மதிப்பெண் பெற்று, சேலம் மாணவர் இசக்கிராஜ் சாதனை படைத்துள்ளார்.

சேலம் மாநகரம், கன்னங்குறிச்சி அருகே உள்ள சின்ன முனியப்பன் கோயில் பகுதியில் வசிப்பவர் ஆறுமுகம். இவர் தனியார் நிறுவனத்தில் துணை மேலாளராகப் பணியாற்றி வருகிறார். இவரது மகன் இசக்கிராஜ். சேலத்தில் உள்ள சார்ட்டட் அக்கவுண்டண்ட் இன்ஸ்டிடியூட்டில் படித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த சிஏ தேர்வை எழுதினார்.

இதில் 800 மதிப்பெண்ணுக்கு 553 மதிப்பெண்கள் பெற்று அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளார். அவருக்குப் பெற்றோர்கள் இனிப்பு ஊட்டி மகிழ்ச்சி தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து தேசிய அளவில் முதல் இடம் பிடித்த மாணவர் இசக்கிராஜுக்கு அவரது உறவினர்களும் நண்பர்களும் வீட்டுக்கு நேரில் வந்து பாராட்டுத் தெரிவித்து இனிப்புகளை வழங்கினர்.

இதுகுறித்து மாணவர் இசக்கிராஜ் கூறும்போது, ''பத்தாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தபோதே, பெற்றோர் ஊக்கம் அளித்து, சிஏ தேர்வில் சிறந்த மதிப்பெண்களைப் பெற்றிட வேண்டும் என்று கூறி வந்தனர். நானும் கடினமாக உழைத்து சிஏ தேர்வில் வெற்றி பெறுவேன் என்று நம்பிக்கை கொண்டிருந்தேன்.

ஆனால், அகில இந்திய அளவில் முதல் மதிப்பெண் பெறுவேன் என்பதை எண்ணிப் பார்க்கவில்லை. சிஏ தேர்வில் முதலிடம் பிடித்ததற்கு ஊக்கம் அளித்த பெற்றோர், வழி நடத்திய ஆடிட்டர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. முதல் மதிப்பெண் பெற்று சேலத்துக்குப் பெருமை சேர்த்ததில் மிகுந்த மிகழ்ச்சி அடைகிறேன்'' என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment