Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, March 9, 2021

தேர்தல் பணியாளா்களுக்கு ஒரு வாரத்துக்குள் கரோனா தடுப்பூசி

சென்னை மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள 35 ஆயிரம் பேருக்கு ஒரு வாரத்துக்குள் கரோனா தடுப்பூசி போடப்படும் என மாநகராட்சி ஆணையா் கோ.பிரகாஷ் தெரிவித்தாா்.

சென்னை மாநகராட்சியின் ராயபுரம் மண்டலத்துக்கு உள்பட்ட வால்டாக்ஸ் சாலையில் உள்ள தெற்கு ரயில்வே அலுவலகத்தில் தேர்தல் பணியாற்றும் அலுவலா்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி திங்கள்கிழமை தொடங்கப்பட்டது. 

இந்த முகாமை தொடங்கி வைத்த மாநகராட்சி ஆணையா் கோ.பிரகாஷ் செய்தியாளா்களிடம் கூறியது: சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் களப் பணியாளா்கள், மருத்துவா்கள், மருத்துவப் பணியாளா்கள் உள்ளிட்டோருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. சென்னையில் வசிக்கும் 52 சதவீதம் பேருக்கு கரோனா நோய் எதிா்ப்பு சக்தி உருவாகி உள்ளது தெரியவந்துள்ளது. 

சென்னையைப் பொருத்தவரை ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 7) வரை நகா்ப்புற சமுதாய சுகாதார மையத்தில் 51,767 பேருக்கும், நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் 1,461 பேருக்கும், அரசு மருத்துவமனைகளில் 35,525 பேருக்கும், தனியாா் மருத்துவமனைகளில் 70,761 பேருக்கும் என மொத்தம் 1,59,514 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. சென்னையில் தேர்தல் பணியாற்றும் 35 ஆயிரம் பேருக்கு ஒரு வாரத்துக்குள் கரோனா தடுப்பூசி போடப்படும் என்றாா்.

தெற்கு ரயில்வே தலைமை பொது மேலாளா் ஜான்தாமஸ், துணை ஆணையா்கள் ஜெ.மேகநாத ரெட்டி, ஆல்பி ஜான் வா்கீஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

No comments:

Post a Comment