Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, June 25, 2021

2012 க்கு முன்பு சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டு அரசு பணிக்காக காத்திருக்கும் வேலைவாய்ப்பக பதிவுமூப்பு ஆசிரியர்கள் - பணியிட நிரப்புதலில் முன்னுரிமை கோரி வேண்டுகோள்!

ஆசிரியர் பணியிடங்கள் நிரப்புதலில் தற்போது TET நடைமுறையில் இருப்பது நாம் அறிந்த ஒன்று. அனால் கடந்த 2010 மார்ச் மாதம் கல்வி மானியக் கோரிக்கையின் போது (சரியாக கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு தமிழக சட்டமன்றத்தில்) அப்போதைய தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்புதல் தொடர்பான அறிவிப்புகள் வெளியிட்டார்.

அதன்படி வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் இருந்த ஆசிரியப் பணி நாடுநர்களுக்கு 5:1 என்ற விகிதாச்சார ஆசிரியர்கள் சான்றிதழ் சரிபார்ப்பிற்காக அழைப்பு விடுக்கப்பட்டது.

அதன்படி 2010 மே, ஜுலை, நவம்பர், டிசம்பர் & 2011 பிப்ரவரி, 2012 ஜனவரி என பல கட்டங்களில் CV எனப்படும் சான்றுகள் சரிபார்ப்பு பணிகள் அனைத்து மாவட்டங்களிலும், மாநில அளவிலும் நடைபெற்றன. பலருக்கு 5:1 விகிதத்தில் பணியும் கிடைத்தது.

பொதுவாக 5:1 என்ற விகிதத்தில் ஒரு பணி நாடுனர் பெயர் வந்தாலே அடுத்தடுத்த CV க்களில் விரைவில் பணி கிடைக்கும் என்ற சூழலில் மீதமுள்ள அப்போதைய 5:1 ஆசிரியர்கள் மற்றும் அவர்களின் சுமார் 11000 ஆசிரியக் குடும்பங்கள் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டு இருந்தன.

ஆனால் அடுத்தடுத்து மத்திய மாநில ஆட்சி மாற்றங்கள் வந்ததால் இந்த வகை வேலைவாய்ப்பக பதிவு மூப்பு ஆசிரியர்களின் கனவு முற்றிலும் தகர்ந்தது. தற்போது வயதும் பத்து வருடங்கள் கூடியிருக்கும்பட்சத்தில் அரசு பணி என்பது கானல்நீராகி விடுமோ என்ற அச்சத்திலேயே காத்துக் கொண்டு இருந்தனர். கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சியமைத்ததால் இந்த வேலைவாய்ப்பக பதிவுமூப்பு வகை ஆசிரியர்களுக்கு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மீண்டும் சற்றே நிம்மதி அடைந்துள்ளனர். முதலமைச்சர் தனிப்பிரிவிற்கும் தொடந்து மனுக்கள் அனுப்பியும் வருகின்றனர்.

இது தொடர்பாக தமிழக பதிவுமூப்பு ஆசிரியர் சங்கம், விரைவில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மற்றும் மாண்புமிகு தமிழக கல்வி அமைச்சர் ஆகியோரைச் சந்தித்து இந்த கோரிக்கையை இனிவரும் சட்டமன்ற மானியக் கோரிக்கைகளில் சேர்த்து கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக, ஏற்கனவே சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டு ஆசிரியர் பணிக்காக காத்துள்ள இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு இல்லாமல் முன்னுரிமை தரவும், முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் ஐயாவின் கரங்களில் பெற்றிருக்க வேண்டிய பணியாணை தற்போது அவரது தவப்புதல்வர் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு. மு.க .ஸ்டாலின் கரங்களில் பெற காத்துள்ள ஆசிரியர்களுக்கு முன்னுரிமை தர ஆவண செய்ய உதவுமாறு கேட்டுக்கொள்வதாக அதன் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.சின்னராசு அவர்கள் இன்று (24/06/2021) தஞ்சையில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment