Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, September 1, 2021

அரசுப் பணியாளர்களுக்கு வீடு கட்டும் முன்பணம் திட்டம்; முழுமையான விவரம்

அரசுப் பணியாளர்களுக்கு வீடு கட்டுவதற்கும், கட்டிய வீடு/ அடுக்குமாடி குடியிருப்பினை வாங்குவதற்கும் வீடு கட்டும் முன்பணத்தினை தமிழக அரசு வழங்குவதாக அமைச்சர் சு. முத்துசாமி அறிவித்தார்.

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் சார்பில் அமைச்சர் சு. முத்துசாமி தாக்கல் செய்த கொள்கை விளக்கக் குறிப்பில், அரசுப் பணியாளர்களுக்கு வீடு கட்டும் முன்பணம் திட்டம் குறித்து அறிவித்திருந்தார்.

அதில், தனது வாழ்நாளில் ஒரு வீட்டை சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் என்பது அரசுப் பணியாளர்களின் கனவாகும். அரசுப் பணியாளர்களின் இக்கனவை நனவாக்கும் வகையில், அரசு, ஒரு நலத்திட்டமாகப் பணியாளர்களுக்கு வீடு கட்டுவதற்கும், கட்டிய வீடு/ அடுக்குமாடி குடியிருப்பினைவாங்குவதற்கும் "வீடு கட்டும் முன்பணத்தினை" வழங்குகிறது.

இம்முன்பணம் 4 ஆண்டுகள் முறையான பணி மற்றும் நுழைவுப் பதவியில் தகுதிகாண் பருவம் முடித்த அரசுப் பணியாளர்களுக்கு வழங்கப்படுகிறது. இம் முன்பணம் அனைத்திந்தியப் பணி அலுவலர்களுக்கு ரூ.60 லட்சமும் மாநில அரசுப் பணியாளர்களுக்கு ரூ.40 லட்சமும் கடனாக அவர்களின் ஊதியத் தகுதிக்கேற்ப வழங்கப்படுகிறது. இவ்வீடு கட்டும் முன்பணத்தில், 50 விழுக்காடு மனையிடம் வாங்குவதற்கும் மீதமுள்ள 50 விழுக்காடு அம்மனையில், வீடு கட்டவும் வழங்கப்படுகிறது.

வீடு கட்டும் முன்பணத்தின் மூலம் கட்டப்பட்ட வீட்டை மேம்படுத்தவும், விரிவாக்கவும் மேற்காண் கடன் தொகையின் தகுதியுள்ள முன்பணத்தில் 50 விழுக்காட்டை வீடு கட்டும் முன்பணத்தின் மொத்த வரம்பிற்குட்பட்டு அனுமதிக்கப்படுகிறது.

தற்போது இப்பிரிவின்கீழ் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் சென்னையில் நெற்குன்றம் பகுதியில் கட்டப்பட்டுவரும் அடுக்குமாடி குடியிருப்பினை வாங்க அனைத்திந்தியப் பணி அலுவலர்களுக்கு ரூ.20 லட்சமும் அரசுப் பணியாளர்களுக்கு ரூ.10 லட்சமும் கூடுதல் கடனாக அனுமதிக்கப்படுகிறது.

அரசுப் பணியாளர்களது நலைனயும் அவர்களது வட்டி சுமையக் கருத்தில் கொண்டும் வங்கிகள் மற்றும் இதர நிதி நிறுவனங்களில் வீடுகட்ட கடன் பெற்றிருக்கும் தொகையை அரசின் வீடுகட்டும் முன்பணமாக மாற்றிக் கொள்ளும் நடைமுறையை அரசு சிலவிதிமுறைகளுடன்தற்போது அனுமதித்துள்ளது.

வீடுகட்டும் முன்பணத் தொகையானது முதலில் 180 தவணைகளில் அசல் முழுவதும் பிடித்தம் செய்யப்பட்டு பின்னர் 60 தவைணகளில் வட்டி பிடித்தம் செய்யப்படும். இக்கடன் தொகைக்கான வட்டி, மாதாந்திர நிலுவைத் தொகைக் குறைவின் அடிப்படையில், ஒவ்வொரு மாத இறுதியில், நிலுவையாக உள்ள தொகைக்கு படிவீத முறைப்படி கணக்கிடப்படுகிறது.

வீடுகட்டும் முன்பணம் பெற்ற ஓர் அரசு ஊழியர் பணியில் இருக்கும்போது இறக்க நேரிட்டால் அந்த அரசு ஊழியரின் குடும்பத்துக்கு உதவி செய்யும் வைகயில், "அரசுப் பணியாளர் வீடுகட்டும் முன்பண சிறப்பு குடும்ப சேமநல நிதித் திட்டம்" என்னும் இணையற்ற திட்டத்தை அரசு வகுத்துள்ளது. இதன்படி, வீடுகட்டும் முன்பணம் பெறும் அனைத்து அரசு ஊழியர்களின் ஊதியத்திலிருந்து ஒவ்வொரு மாதமும், மாதாந்திர தவணைத் தொகையில் 1 விழுக்காடு பிடித்தம் செய்யப்படும். இத்தொகையானது, அரசால் தனி நிதியாக பராமரிக்கப்படுகிறது. இத்திட்டத்தில் உறுப்பினராக உள்ள ஓர் அரசு ஊழியர் பணியிலிருக்கும்போது இறக்க நேரிட்டால், பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் அவரது கணக்கில் நிலுவையிலுள்ள வீடு கட்டும் முன்பண அசல் மற்றும் வட்டித் தொகை இந்நிதியிலிருந்து ஈடு செய்து கொள்ளப்படும்.

நடப்பு நிதியாண்டில், வீடுகட்டும் முன்பணம் அளிப்பதற்காக திருத்திய நிதிநிலை அறிக்கையில் ரூ.160 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தவிர, தலைமைச் செயலகப் பணியாளர்கள் மற்றும் அனைதிந்தியப் பணி அலுவலர்களுக்கு வீடுகட்டும் முன்பணம் வழங்குவதற்கு ஏதுவாக, தலைமைச் செயலகத்தின் அனைத்துத் துறைகளுக்கும் தனித் தனியே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment