மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலைப் படிப்புகளில் சேருவதற்கான பொதுப் பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு(CUET) முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெள்ளிக்கிழமை அதிகாலை வெளியிட்டது.
நாட்டில் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகளில் மாணவர்களை சேர்க்க மத்திய பல்கலைக்கழக பொது நுழைவு தேர்வு எனப்படும் (கியூட்) தேர்வை மத்திய அரசு நடத்துகிறது. நடப்பு கல்வியாண்டு முதல் புதிய கல்விக்கொள்கையின் படி, மத்திய பல்கலைக்கழகங்களில் 2022-23 ஆம் ஆண்டிற்கான இளங்கலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான கியூட் பொது நுழைவுத் தேர்வை தேசிய தேர்வு முகமை கடந்த ஜூலை மாதம் 15 முதல் ஆகஸ்ட் 30 வரை ஆறு கட்டங்களாக நடத்தியது. இந்தியாவில் 500 நகரங்களிலும், நாட்டிற்கு வெளியே 2 நகரங்களிலும் கியூட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டது.
தமிழ், இந்தி உள்பட 13 மொழிகளில் கணினி வழியில் தேர்வு நடைபெற்றது. நாடு முழுவதும் சுமார் 60 சதவிகித மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதினர். தேர்வு முடிந்து ஒரு மாதம் கடந்த நிலையில், தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை இரவு பத்து மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெள்ளிக்கிழமை அதிகாலை வெளியிட்டுள்ளது.
தேர்வு முடிவுகளை மாணவர்கள் https://cuet.samarth.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள முகப்புப் பக்கத்தில் 'CUET UG 2022 முடிவுகள்' என்ற இணைப்பைக் கிளிக் செய்து தேர்வர்கள் தங்களது விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும், தேர்வு எழுதியவர்களின் விவரங்கள் தொடர்புடைய பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில், தேர்வர்கள் தாங்கள் சேர விரும்பும் பல்கலைக்கழகத்தை தொடர்பு கொண்டு படிப்பிற்கான சேர்க்கையை பெறலாம் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
Friday, September 16, 2022
கியூட் இளங்கலை தேர்வு முடிவுகள் வெளியானது!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment