Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, January 28, 2023

ஆசிரியர்களுக்கு ஜனவரி 2023 மாத ஊதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்க ஆசிரியர் சங்கம் கோரிக்கை!

தமிழகத்தில் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு ஜனவரி 2023 மாத ஊதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வாழ்வாதாரத்தின் அடிப்படை என்பதை உணர்ந்து அலட்சியம் காட்டாமல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் ந.ரெங்கராஜன் வலியுறுத்தல்..

புத்தாண்டு பிறந்த ஜனவரி 2023 மாதத்தில் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு மாத ஊதியம் கிடைக்காது என்ற தகவல் பேரிடியாய் தாக்கியுள்ளது. அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கு ஜனவரி 2023 ஊதிய பட்டியல் IFHRMSல் தயாரிக்கும் போது நிதி ஒதுக்கீடு இல்லை என்பதால் ஊதியப் பட்டியல் தயாரிக்க முடியவில்லை. 17.1.2023க்கு முன்னர் தயாரித்த ஊதியப்பட்டியல்கள் மட்டும் ஜெனரேட் ஆகிவந்துள்ளது. நிதி ஒதுக்கீடு இல்லாததால் ஜெனரேட் ஆகி வந்த பில்லையும் கருவூலத்தால் பாஸ் செய்ய முடியாது என்று கூறப்படுகிறது.

IFHRMS எனப்படும் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டம் (Integrated Financial And Human Resource Management System) மூலம் இனி சம்பளம் பில், கண்டிஜன்ஸ் பில், ட்டி.ஏ பில் போடுவதற்கு அதிக நாட்கள் எடுக்க முடியாது. எல்லாம் சிறிது நேரத்திலேயே முடிந்து விடும். இதன் மூலம் பில் போட்ட உடனே டோக்கன் நம்பர், ஈசிஎஸ் நம்பர் வந்து விடும். இனி டோக்கன் போடுவதற்கும், பில் பாஸ் ஆகிவிட்டதா என்று பார்ப்பதற்கும் அடிக்கடி கருவூலம் செல்ல வேண்டிய அவசியம் இல்லை.

கருவூலத்தில் நம்மை அலைக்கடிக்க முடியாது. நமக்கு சேர வேண்டிய பணம் உடனே கிடைக்கும். தேவையில்லாமல் கருவூலத்தில் பில் நிறுத்தி வைக்க முடியாது. ஆடிட் போட வேண்டும் என்றால் உடனே போட வேண்டும். அதனையும் நமது அலுவலகத்தில் இருந்தே பார்த்துக் கொள்ளலாம். உண்மையில் இதனால் அரசு பணியாளர்களுக்கு மிகுந்த நன்மை என்றெல்லாம் தேர்தல் வாக்குறுதி போல் நாக்கில் தேன் தடவும் பிரச்சாரம் நடந்தது.

ஆனால் காலம் போகப்போக இதனால் ஏற்படும் சிரமங்கள் அதிகரித்துவிட்டது. இதன் மூலம் ஏற்படும் இடையூறுகளுக்கு உடனடி தீர்வு கிடையாது என்பது எழுதப்படாத சட்டமாக மாறிவிட்டது. இதன் அடுத்த கட்டமாக அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு ஜனவரி 2023 மாதத்தில் ஊதியம் கிடைக்காது என்ற நிலை வந்து விட்டது. இதற்கு எப்போது தீர்வு கிடைக்கும் என்று எவராலும் உறுதியாக பதில் சொல்ல முடியவில்லை.

இது உண்மையா அல்லது உள்நோக்கத்தோடு செயல்படுத்தப்படுகிறதா என்ற அச்சம் அனைத்து ஆசிரியர்களுக்கும் ஏற்பட்டுள்ளது. தவறுகளுக்கு பொறுப்பேற்கத் துணியாமல் ஒருவருக்கொருவர் குற்றம் காட்டிக் கொள்வது போல் தற்போது அனைவரும் சேர்ந்து கணினி தொழில்நுட்பத்தை கைகாட்டுகின்றனர். தொழில்நுட்ப கோளாறா? அல்லது ஊதியம் வழங்க நிதி இல்லையா? என்று புரியாத புதிராக உள்ளது.

எது எப்படி இருந்தாலும் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டியது அரசின் தலையாய கடமையாகும். ஊதியம் இல்லை என்பது எவரும் எளிதில் கடந்து போகும் விஷயமல்ல. வாழ்வாதாரத்தின் அடிப்படை உரிமையை பறிப்பதாகும். இது எத்தகைய எதிர் விளைவுகளையும் உருவாக்கும். எனவே இந்த விபரீதத்தை உணர்ந்து அலட்சியம் காட்டாமல் அரசு துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

விரைந்து பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டு அரசு நிதி உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு ஜனவரி 2023 மாத ஊதியத்தை, மாதக் கடைசி நாளில் பெறுவதற்கு உரிய நடவடிக்கைகளை கல்வித்துறை மற்றும் நிதித்துறை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும். இதில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும், மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அவர்களும் நேரடியாக தலையிட்டு தீர்வு ஏற்படுத்தி உதவ வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்..

ந.ரெங்கராஜன்
பொதுச்செயலாளர், TESTF.
இணை பொதுச்செயலாளர், AIPTF.

No comments:

Post a Comment