Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, May 7, 2023

நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான விதிமுறைகள்: எடுத்து செல்ல வேண்டிய ஆவணங்கள் எவை எவை? தேசிய தேர்வு முகமை வௌியீடு

நாடு முழுவதும் 18.72 லட்சம் மாணவர்கள் எழுதும் நீட் தேர்வு நாளை நடக்கிறது. தமிழ்நாட்டில் இருந்து 1 லட்சம் பேர் பங்கேற்கின்றனர்.

மோதிரம், வளையல், காதணிகள், மூக்குத்தி, செயின், கண்ணாடிகள், தாயத்து, பெல்ட் உள்ளிட்டவை அணிந்து செல்ல அனுமதியில்லை என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. 

எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி உட்பட இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வு தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு இந்தியாவில் 499 நகரங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

இந்த தேர்வு நாளை (7ம் தேதி) பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை நடக்கிறது. இத்தேர்வில் பங்கேற்க 18 லட்சத்து 72 ஆயிரம் மாணவ-மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். 

தேர்வை முறையாக நடத்தி முடிக்க தேசிய தேர்வு முகமை அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.

இந்நிலையில் நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் கடந்த 3ம் தேதி வெளியிடப்பட்டது. இணையதளம் வாயிலாக ஹால்டிக்கெட்டுகளை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஏற்கனவே மாணவர்கள் தேர்வு எழுத கூடிய நகரங்கள் தெரிவிக்கப்பட்ட நிலையில் ஹால் டிக்கெட்டில் தேர்வு மையங்கள், தேர்வு விதிமுறைகள் குறித்த விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. மாணவர்கள் https://neet.nta.nic.in மற்றும் www.nta.ac.in ஆகிய இணையதளத்தில் விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம். மாணவர்கள் நுழைவு சீட்டை பதிவிறக்கம் செய்வதில் ஏதேனும் சிரமம் இருந்தால் எண் 011-40759000 அல்லது neet@nta.ac.in இணையதளத்தில் தொடர் புகொள்ளலாம் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உள்பட 11 மொழிகளில் நடத்தப்படுகிறது. தமிழகத்தில் 1 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர். தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கோவை, மதுரை, கடலூர், கரூர், திருச்சி, கன்னியாகுமரி, தஞ்சாவூர், வேலூர், விழுப்புரம், ஊட்டி உள்ளிட்ட 31 நகரங்களில் நீட் தேர்வு நடைபெறுகிறது. நீட் தேர்வில் கடுமையான பரிசோதனைகள், கெடுபிடிகள் கடைப்பிடிக்கப்படும்.

நீட் தேர்வு எழுதுவோர் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்

* நீட் 2023 ஹால் டிக்கெட்களை கட்டாயம் எடுத்து செல்ல வேண்டும்.

* இணையம் மூலம் தரவிறக்கம் செய்யப்பட்ட ஹால் டிக்கெட்டில் சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு வண்ண புகைப்படத்தை உரிய இடத்தில் ஒட்டியிருக்க வேண்டும்.

* ஒன்றிய அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள சான்றுகளில் ஏதேனும் ஒன்றின் ஒரிஜினல் அட்டை வைத்திருக்க வேண்டும்.

* ஆதார் அட்டை, பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், புகைபடத்துடன் கூடிய ரேஷன் அட்டை அல்லது ஒன்றிய அரசால் வழங்கப்பட்ட, புகைப்படத்துடன் கூடிய இதர வகை அடையாள அட்டை, இவற்றில் ஏதாவது ஒன்று எடுத்து செல்லுதல்.

* நீட் தேர்வு எழுதும் மாற்று திறனாளிகள், ஒன்றிய, மாநில அரசுகளினால் அளிக்கப்படும் மாற்று திறனாளிகள் சான்றிதழ்.

* சமீபத்தில் எடுக்கப்பட்ட, பாஸ்போர்ட் அளவு கொண்ட புகைப்படம் எடுத்து செல்ல வேண்டும்.

* தேர்வு எழுதுபவர்களுக்கு தேர்வு மையத்திலேயே நீலம், கருப்பு பேனா வழங்கப்படும்.

* விடைகளை எழுதி முடித்த பிறகும் மாணவர்கள் அறையை விட்டு வெளியேற அனுமதியில்லை. தேர்வு நேரம் முடியும் வரை தேர்வறையில் அமர்ந்திருக்க வேண்டும்.

தேர்வு அறைக்கு எடுத்து செல்ல தடை செய்யப்பட்ட பொருட்கள்

* மோதிரம், வளையல், காதணிகள், மூக்குத்தி, செயின், நெக்லஸ், பதக்கங்கள்.

* அச்சிடப்பட்ட அல்லது எழுதப்பட்ட காகித துண்டுகள், பென்சில் பாக்ஸ், பிளாஸ்டிக் பை, கால்குலேட்டர், அளவுகோல், பென்டிரைவ், ரப்பர், எலக்ட்ரானிக் பேனா.

* செல்போன், புளூடூத், இயர்போன்கள், வாட்ச், கேமரா.

* பேக்கிங் செய்யப்பட்ட உணவுப்பொருட்கள், தண்ணீர் பாட்டில்.

ஆடை வழிமுறைகள்

* கை முழுவதும் மூடியநிலையில் உள்ள ஆடைகள் அணியகூடாது. அரை கை கொண்ட லேசான ஆடைகளை அணிய வேண்டும். நீண்ட கை கொண்ட ஆடைகளை அணிவது அனுமதிக்கப்படாது.

* மணிபர்ஸ், கண்ணாடிகள், ஹேர்பேண்ட், தாயத்துகள், பெல்ட், தொப்பி, தாவாணி உள்ளிட்டவை அனுமதி இல்லை.

* சம்பிரதாய மற்றும் பாரம்பரிய உடை அணிந்து வருபவர்கள் ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக வரவேண்டும்.

* உயரம் குறைவாக உள்ள செருப்புகள் மட்டுமே அணிய வேண்டும். ஹீல்ஸ் அணிய கூடாது.

* ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே தேர்வு மையத்திற்கு வரவேண்டும்.

* சர்க்கரை நோயாளிகள் மற்றும் நாட்பட்ட நோய்களுக்கு மருந்து எடுத்து கொள்பவர்கள் உரிய அனுமதியுடன் மருந்து, பழம், வெளிப்படையான குடிநீர் பாட்டில் கொண்டு செல்லலாம்.

இவ்வாறு பல்வேறு கட்டுப்பாடுகளை தேசிய தேர்வு முகாமை விதித்துள்ளது.

No comments:

Post a Comment