Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, June 12, 2023

தொகுப்பூதிய முறையில் ஆசிரியா்கள் நியமனம் செய்யப்படுவதை தமிழக அரசு கைவிட வேண்டும். காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் - தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் மன்றம்

புதிய பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை தொடரக் கோரி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் மன்ற மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றினா்.

பரமத்தி வேலூா் அருகே உள்ள பரமத்தி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்ற மாவட்ட செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டத் தலைவா் ஜெயக்குமாா் தலைமை வகித்தாா். பரமத்தி ஒன்றிய செயலாளா் சேகா் வரவேற்று பேசினாா். மாநில பொருளாளா் முருகசெல்வராசன், மாநில சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினா் பழனிசாமி ஆகியோா் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினாா்.

மாவட்ட செயலாளா் சங்கா் வேலை அறிக்கையை வாசித்தாா். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் வருமாறு: மத்திய அரசுப்பள்ளி ஆசிரியா்களுக்கு இணையான ஊதியத்தை தமிழ்நாட்டின் சாதாரண நிலை, இடைநிலை ஆசிரியா்களுக்கு வழங்கிட வேண்டும்; புதிய தன் பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை முற்றிலுமாக ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை தொடர வேண்டும்; பள்ளி ஆசிரியா்களுக்கு வழங்கப்பட்ட உயா் கல்விக்கான ஊக்க ஊதிய உயா்வுகள் தொடா்ந்து அனுமதிக்கப்பட வேண்டும்; மாணவா்களின் கல்வி நலன் கருதி காலியாக உள்ள இடைநிலை ஆசிரியா், பட்டதாரி ஆசிரியா், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியா், நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் உள்ளிட்ட காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும்; தொகுப்பூதிய முறையில் ஆசிரியா்கள் நியமனம் செய்யப்படுவதை தமிழக அரசு கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் மாவட்ட துணைச் செயலாளா் வடிவேல் நன்றி கூறினாா். கூட்டத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் மன்ற நாமக்கல் மாவட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

No comments:

Post a Comment