THAMIZHKADAL TODAY NEWS

கேந்த்ரீய வித்யாலயா பள்ளிகளில் எம்.பி.க்களின் ஒதுக்கீட்டை புதுப்பிக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசு தகவல்

கேந்த்ரீய வித்யாலயா பள்ளிகளில் எம்.பி.க்களின் ஒதுக்கீட்டை புதுப்பிக்கும் திட்டம் இல்லை என்று மத்திய கல்வித்துறை தெரிவித்துள்ளது.

கேந்த்ரீய வித்யாலயா பள்ளிகளில் எம்.பி.க்கள் உள்ளிட்டோருக்கு இருந்து வந்த ஒதுக்கீட்டை மத்திய அரசு கடந்த ஆண்டு ரத்து செய்தது. இதன் மூலம் மத்திய அரசின் நிதியுதவியுடன் நடத்தப்படும் இப்பள்ளிகளில் 40,000 மாணவர் இடங்கள் காலியாகின.

ஏற்கெனவே ஒரு கேந்த்ரீய வித்யாலயா பள்ளிக்கு எம்.பி.க்களால் தலா பத்து குழந்தைகளைப் பரிந்துரைக்க முடியும் என்ற நிலை இருந்தது. ஒரு மாவட்ட ஆட்சியரால் ஒரு பள்ளிக்கு 17 குழந்தைகள் வரை பரிந்துரைக்க முடிந்தது.

இந்நிலையில் கேந்த்ரீய வித்யாலயா பள்ளிகளில் படிப்பதற்கு குழந்தைகளைப் பரிந்துரைக்கும் சலுகை எம்.பி.க்களுக்கு மீண்டும் வழங்கப்படுமா? என்று மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து மத்திய கல்வித்துறை இணையமைச்சர் அன்னபூர்ணா தேவி திங்கள்கிழமை கூறியதாவது:

கேந்த்ரீய வித்யாலயா பள்ளிகளில் எம்.பி.க்களின் ஒதுக்கீட்டை புதுப்பிக்கும் திட்டம் இல்லை. பாதுகாப்புப் படையினர், ஊர்க்காவல் படையினர், மத்திய தன்னாட்சி அமைப்புகள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் பணியிட மாறுதலுக்கு வாய்ப்புள்ள பணிகளில் இருப்போரின் குழந்தைகளுக்கு கல்வி அளிப்பதற்காக கேந்த்ரீய வித்யாலயா பள்ளிகள் தொடங்கப்பட்டன. எம்.பி.க்கள் உள்ளிட்டோரின் பரிந்துரைகள் மூலம் இப்பள்ளிகளில் மாணவர்களைச் சேர்ப்பதால் அங்கு அனுமதிக்கப்பட்ட அளவை விட 40 சதவீத கூடுதல் மாணவர்கள் படிக்கும் நிலை தோன்றுகிறது. இதனால் அங்கு கற்றல் பாதிக்கப்பட்டு வந்தது என்று அவர் தனது பதிலில் தெரிவித்துள்ளார்.

தற்போது நாடு முழுவதும் 1200க்கும் மேற்பட்ட கேந்த்ரீய வித்யாலயா பள்ளிகல் உள்ளன. அவற்றில் 14.35 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர்.

முன்னதாக, மக்களவை எம்.பி.க்கள் 543 பேர், மாநிலங்களவை எம்.பி.க்க்ள் 245 பேர் மூலம் கேந்த்ரீய வித்யாலயா பள்ளிகளில் படிப்பதற்கு 7,880 மாணவர்கள் வரை பரிந்துரைக்கப்பட்டு வந்தனர்
Share:

No comments:

Post a Comment

Categories

Total Pageviews

Thamizhkadal WhatsApp Channel