Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, November 22, 2023

மழை விடுமுறை - சூழலுக்கு ஏற்ப பள்ளி தலைமை ஆசிரியர்கள் முடிவு - நடைமுறையில் சாத்தியமா?

மழைக் காலங்களில் மாணவர்களின் பாதுகாப்பு கருதி விடுமுறை விடப்படுவது எப்பொழுதும் உள்ள நடைமுறை. விடுமுறை விடப்படுவதற்கான முக்கிய காரணம் மாணவர்கள் மழையில் நனைந்து அதைத்தொடர்ந்து வரும் நாட்களில் நோய்வாய்ப்பட்டு விடுப்பு எடுக்காமல் இருப்பதற்காகவும் தான்.

தற்போது உள்ள தகவல் தொடர்பு வசதியில் தொலைக்காட்சி வழியாக மாவட்ட ஆட்சியர் விடுப்பு அறிவித்தால் மாவட்டம் முழுவதும் சென்றடையும் வாய்ப்பு உள்ளது.

இந்த அறிவிப்பு மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு பொருந்தும் என்பதால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் குழப்பம் இன்றி முடிவெடுக்க முடியும்.

சூழலுக்கு ஏற்ப பள்ளி தலைமை ஆசிரியர்கள் முடிவு எடுக்க வேண்டும் என்ற அறிவிப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் குழப்பத்தையே ஏற்படுத்தும்.

பள்ளி தலைமை ஆசிரியரால் பள்ளி விடுமுறை என்ற தகவலை அனைத்து மாணவர்களுக்கும் கொண்டு சேர்க்க முடியாது. முதல் நாள் மாலை 4:30 மணி வரையில்தான் தகவல்களை மாணவர்களுக்கு சேர்க்க முடியும்.

காலையில் தலைமை ஆசிரியர் பள்ளிக்கு விடுப்பு விட நினைத்தாலும் மாணவர்களுக்கு அந்த தகவல் சென்று சேர வாய்ப்பு இல்லாததால் மாணவர்கள் நனைந்து பள்ளிக்கு வந்து பள்ளி விடுப்பு என்று தெரிந்து மீண்டும் இல்லம் திரும்ப நேரிடும்.

இந்த குழப்பமான நடைமுறையினால் விடுமுறை அளிக்கும் நோக்கமே சிதைந்து விடுகிறது.

பள்ளி வேலை நாட்கள் கணக்கிடுவதிலும் ஒரு மாவட்டத்தில் சீரற்ற முறையில் இருக்கும். ஈடுசெய்யும் வேலை நாள் அறிவிப்பதிலும் குழப்பம் ஏற்படும்.

மழைக்காக விடப்படும் விடுமுறைகளை மாவட்டம் அல்லது தாலுக்கா முழுமைக்கும் மாவட்ட நிர்வாகமே அறிவித்த முன்பிருந்த நடைமுறையே சிறப்பானதாகும்.

No comments:

Post a Comment