![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgYrQjhf-mWi9ypKDJc3gl0AriZVo7YkcYRmIJDURgEJp0A2LTPSdOqSiwkE56xfNp-P2EJ0txwfbNVXEQU2kYFI14T3WICg8QioIX5lO1Bz9Mo3DAZa2DErqyH9gpjM_uDBJwmDbGfD26XtdzdxSoWF8JR6UqPRAx0bQfiQWYoWn8K7rxR1dxd9Bg_sT8/w400-h278/madurai%20high.jpg)
தரமான கல்வியை பெறும் உரிமை உள்ளதால், பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்களை நிரந்தரமாக நியமிக்க வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி பாரதிதாசன் பல்கலைக்கழக மாதிரி கல்லூரியில் கணினி அறிவியல் துறை கவுரவ விரிவுரையாளராக பணியாற்றும் ரமேஷ் என்பவர், தனது பணியை வரன்முறை செய்து பணிமூப்பு உள்ளிட்ட பணப்பலன்களை வழங்குமாறு உத்தரவிடக் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பட்டு தேவானந்த் பிறப்பித்த உத்தரவு:
எந்தவொரு சமூகத்தின் வளர்ச்சிக்கும் கல்வி மிக முக்கியமானது. ஒரு நாட்டின் சமூக, பொருளாதார முன்னேற்றத்திற்கு கல்வி மிக முக்கிய பங்கை வகிக்கிறது. உயர் கல்வியை வழங்குவதற்காகத் தான் நாடு முழுவதும் பல்கலைக்கழக அமைப்புகள் உருவாக்கப்பட்டன.
இவை, தரமான கல்வியை வழங்க வேண்டும். இதற்காகவே நல்ல ஆசிரியர்களை வழங்க வேண்டும் என பல்கலைக்கழக மானிய குழு தொடர்ந்து வழிகாட்டுதல்களை வழங்கி வருகிறது. பல பல்கலைக்கழகங்கள் தரமான கல்வியை வழங்குவதில் பல சிக்கல்களை எதிர்கொள்கின்றன.
சமூக மற்றும் பொருளாதாரரீதியாக பின்தங்கியோர் மாநில அரசின் நிதியுதவி பெறும் பல்கலைக்கழகங்களையே நாடுகின்றனர். ஆனால், போதிய வசதிகள் இல்லாவிட்டாலும், அங்கேயே கல்வியை தொடர வேண்டிய கட்டாயம் உள்ளது.
ஒவ்வொருவரும் தரமான கல்வியைப் பெற உரிமை உண்டு. கல்வி என்பது அடிப்படை மனித உரிமை. இது தனிமனிதன் மட்டுமின்றி ஒட்டுமொத்த வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. தரமான கல்விக்கு ஆசிரியர்களை நிரந்தர பணியில் நியமிப்பதே சரியானது.
எனவே, பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் அரசு கல்வி நிறுவனங்களில் நிரந்தர அடிப்படையில் தகுதியான நபர்களை ஆசிரியர் பணியிடங்களில் நிரப்ப வேண்டும். இதற்கு தேவையான நடவடிக்கைகளை ஒன்றிய மனிதவள மேம்பாட்டு துறை மற்றும் பல்கலைக்கழக மானிய குழு உள்ளிட்டவை மேற்கொள்ள வேண்டும். இதனடிப்படையில் மனுதாரர் மனுவை பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment