Wednesday, May 28, 2025

கணினி அறிவியல்' பாடம் மீது அளப்பரிய ஆர்வம் ஏன்?

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள், கடந்த 16ல் வெளியாகின. தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பிளஸ் 1 வகுப்பில் இணைந்து வருகின்றனர்.

பொதுவாக கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாடங்களை கொண்டது முதல் குரூப்பாக உள்ளது. இதில், ஒரு பாடம் தவிர்த்து வணிக கணிதம் அல்லது கணினி அறிவியல் இடம் பெறும் வகையில் இரண்டாவது குரூப் உள்ளது.

மூன்றாவது குரூப்பாக வணிகவியல், கணக்கு பதிவியல், வரலாறு சேர்கிறது. சில பள்ளிகளில் இவற்றுடன் வணிக கணிதம், அரசியல் அறிவியல் பாடம் சேர்க்கப்படுகிறது.

கணிதம், அறிவியல் பாடங்கள் இடம்பெற்றுள்ள குரூப்களில் சேர விரும்பும் மாணவர்கள் பலரும், இந்த குரூப்களில் கணினி அறிவியல் ஒரு பாடமாக உள்ளதா என்பதை அறிய விரும்புகின்றனர். பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் குறைவாக இருந்தால், மூன்றாவது குரூப்பில் கணினி பயன்பாடு பாடம் உள்ளதா என தேடுகின்றனர்.

ஏன் இந்த ஆர்வம்?

பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் கூறுகையில், 'பிளஸ் 2 தேர்வு முடிவில், இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், விலங்கியல் பாடங்களை விட, கணினி அறிவியல், கணினி பயன்பாடு ஆகிய பாடங்களில் அதிக சென்டம்; தேர்ச்சி சதவீதமும் அதிகம். செய்முறை தேர்வு மூலமாக, ஒரு மதிப்பெண் வினாக்கள் மூலமாக எளிதில் கூடுதல் மதிப்பெண் பெற்று மேற்கண்ட பாடங்களில் சென்டம் பெற்று விடுகின்றனர்.

கடந்தாண்டு தேர்ச்சி விகிதத்தில் சென்டம் எண்ணிக்கையை பார்க்கும், பல மாணவர்கள் எங்களுக்கு கணினி அறிவியல்தான் வேண்டும் என கேட்கின்றனர். ஏ.ஐ., - சாட் ஜி.பி.டி., உள்ளிட்ட செயற்கை நுண்ணறிவு மீதான தாக்கத்தால் கணினி சார்ந்த பாடங்களை தேடுகின்றனர்; தேர்வு செய்கின்றனர்,' என்றார்.

தொழிற்கல்வி மீது ஆர்வம் இல்லை

சில பள்ளிகளில் அறிவியல், கணிதம், கணினி அல்லாத நான்காவது, ஐந்தாவது பாடப்பிரிவாக தொழிற்கல்வி படிப்பு உள்ளது. தொழிற்கல்வி சார்ந்த பாடப்பிரிவை தேர்வு செய்ய மாணவ, மாணவியர் ஆர்வம் காட்டுவதில்லை.

பெரும்பாலான பள்ளிகளில், ஒற்றை இலக்க மாணவர்களுக்கு இப்பாடப்பிரிவில் இணைந்துள்ளனர். மதிப்பெண் குறைவாக பெற்ற மாணவர் முதலிரண்டு பாடப்பிரிவு கிடைக்காத பட்சத்தில், தொழிற்கல்வி பாடப்பிரிவை தேர்வு செய்து கொள்ளலாம் என, தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்துகின்றனர். அதேபோல் இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல் அடங்கிய முழுமையான அறிவியல் பாடப்பிரிவில் சேர்வதற்கும் மாணவர்களிடம் ஆர்வம் இல்லை.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News