JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் கல்வித் துறையில் அன்றாடம் மிகப்பெரிய பங்களிப்பை அளித்து வருகின்றனர். இவர்கள் தங்கள் கடமைப்பட்ட பணிகளுக்கு முறையான ஊதியம் மற்றும் சலுகைகளை எதிர்பார்த்துக்கொண்டு, பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வந்துள்ளார்கள்.
இடைநிலை ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களாக இருந்தாலும், அவர்கள் தங்கள் பணி மற்றும் தகுதிக்கு ஏற்ப ஊதியம் பெறவில்லை. அவர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்பது அவர்கள் முக்கிய கோரிக்கையாக உள்ளது. இது தொழிலாளர் உரிமைகளுக்கு அடிப்படை கொள்கை என்பதால், இந்த கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே மீட்டெடுத்து, பணியில் இருந்தவர்களுக்கு உரிய ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும். ஊதிய முரண்பாடுகளை உடனடியாக சரிசெய்து, அவர்கள் பணி கடமைகளுக்கு ஏற்ற முறையான ஊதிய கணக்கீடு செய்யப்பட்டு வழங்கப்பட வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கான உயர்கல்வி ஊக்க ஊதிய உயர்வு வழங்குவதற்கு முன் இருந்த நடைமுறையை மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இடைநிலை ஆசிரியர்களின் காலி பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்பட வேண்டும்.
எனவே திமுக அரசு, அதன் தேர்தல் வாக்குறுதிகளின் அடிப்படையில், இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இடைநிலை ஆசிரியர்களின் பணி மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும். நிறுத்தப்பட்ட உயர்கல்வி ஊக்க ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம், மற்றும் சம வேலைக்கு சம ஊதியம் போன்ற கோரிக்கைகள் உடனடியாக இந்த தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment