பொறியியல் மாணவர் சேர்க்கையில் பொதுப்பிரிவினருக்கான முதல் சுற்று கலந்தாய்வில் 35,214 மாணவர்களுக்கு தற்காலிக இட ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டுள்ளது. அந்த மாணவர்கள் தற்காலிக ஒதுக்கீட்டை இன்று மாலை 5 மணிக்குள் உறுதிப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நடப்புக் கல்வி ஆண்டு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் கலந்தாய்வு ஜூலை 13-ம் தேதியும், சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு 15-ம் தேதியும் நடைபெற்றன.
இந்தக் கலந்தாய்வின் மூலம் 950 பேருக்கு இட ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கப்பட்டன. இதைத்தொடர்ந்து பொதுப்பிரிவினருக்கான முதல்சுற்று ஆன்லைன் கலந்தாய்வு, கடந்த 20-ம் தேதி தொடங்கியது.
இதில் 200 முதல் 171 கட் ஆப் மதிப்பெண் பெற்றவர்கள், அரசுப் பள்ளி மாணவர்கள், பொதுப்பிரிவு மற்றும் அரசுப் பள்ளி 7.5 சதவீத ஒதுக்கீட்டில் தகுதியுள்ள அனைத்து தொழிற்கல்வி மாணவர்களும் கலந்துகொண்டனர்.
நேற்று காலை 10 மணி வரை முதல் சுற்று கலந்தாய்வில் 35,214 மாணவர்களுக்கு தற்காலிக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்காலிக இடஒதுக்கீடு பெற்ற மாணவர்கள், இன்று (சனிக்கிழமை) மாலை 5 மணிக்குள் தங்கள் இடங்களை உறுதி செய்ய வேண்டும்.
அவ்வாறு உறுதிப்படுத்தும் மாணவர்களுக்கு நாளை (ஞாயிறு) காலை 10 மணிக்கு இறுதி ஒதுக்கீட்டு ஆணை ஆன்லைனில் வழங்கப்படும் என தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் புருஷோத்தமன் தெரிவித்துள்ளார்

No comments:
Post a Comment