Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, May 3, 2019

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு: சென்னை மண்டலத்துக்கு 2-ஆவது இடம்


சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. இதில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இரு மாணவிகள் 499 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளனர்.
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகள் கடந்த மார்ச் 2-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 4-ஆம் தேதி வரை நடைபெற்றது. நாடு முழுவதும் இந்தத் தேர்வை 12 ஆயிரத்து 441 பள்ளிகளைச் சேர்ந்த 12 லட்சத்து 5,484 மாணவர்கள் எழுதினர். இந்நிலையில், தேர்வு முடிவுகள் www.cbse.nic.in, www.cbse results.nic.in ஆகிய இணையதளங்களில் வியாழக்கிழமை நண்பகல் 12.30 மணிக்கு வெளியிடப்பட்டது. இந்தத் தேர்வில் 83.40 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


தேர்வெழுதிய 12 லட்சத்து 5,484 மாணவ, மாணவிகளில் 10 லட்சத்து 5,427 பேர் வெற்றி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் 83.01 ஆகும். இவ்வாண்டு 88.70 சதவீத தேர்ச்சியுடன் மாணவிகள் முன்னிலை வகிக்கின்றனர். மாணவர்கள் தேர்ச்சி சதவீதம் 79.40 ஆகும்.
சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வில் ஒட்டுமொத்த அளவில் திருவனந்தபுரம் மண்டலம் 98.20 சதவீத தேர்ச்சியுடன் முதலிடத்தையும், தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம், மகாராஷ்டிரம், கோவா, புதுச்சேரி, அந்தமான் நிகோபார் தீவுகள், டாமன், டையூ ஆகிய மாநிலங்கள்-யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கிய சென்னை மண்டலம் 92.93 சதவீத தேர்ச்சியைப் பெற்று இரண்டாமிடத்தையும், தில்லி மண்டலம் 91.87 சதவீதத் தேர்ச்சியுடன் மூன்றாமிடத்தையும் பிடித்துள்ளன.


அகில இந்திய அளவில் உத்தரப் பிரதேச மாநிலம் காஸியாபாத்தை சேர்ந்த ஹன்சிகா சுக்லா, முசாபர்நகரை சேர்ந்த கரிஷ்மா ஆகிய இருவரும் 500-க்கு 499 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர்.
சென்னை மாணவர் மூன்றாமிடம்: சென்னை கே.கே.நகரில் உள்ள பத்மா சேஷாத்ரி பள்ளி மாணவர் ஜி. கார்த்திக் பாலாஜி 497 மதிப்பெண் பெற்று அகில இந்திய அளவில் மூன்றாமிடத்தைப் பிடித்துள்ளார். கணிதம், வேதியலில் 100-க்கு 100 மதிப்பெண்களும், இயற்பியல், ஆங்கிலம், கணினி அறிவியல் ஆகிய பாடங்களில் தலா 99 மதிப்பெண்களும் பெற்றுள்ளார்.
இதுகுறித்து மாணவர் ஜி.கார்த்திக் பாலாஜி கூறுகையில், பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு எந்தவித மன அழுத்தமும் இல்லாமல் படித்தேன். இடையே தொலைக்காட்சி பார்த்தல், விளையாடுதல் போன்ற செயல்பாடுகளையும் வழக்கம் போலவே மேற்கொண்டேன்.

ஒவ்வொரு பாடத்தையும் ரசித்தும், மனதுக்கு பிடித்தும் படித்ததே எனது வெற்றியின் ரகசியமாகும். அகில இந்திய அளவில் மூன்றாமிடத்தைப் பெறுவதற்கு எனது பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள், பெற்றோர் என உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்தகட்டமாக ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் கணினி அறிவியல் துறையைத் தேர்வு செய்ய முடிவு செய்துள்ளேன் என்றார்.
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வில் மத்திய அரசின் கீழ் செயல்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் 98.54 சதவீதமும், ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகள் 96.62 தேர்ச்சியும் பெற்றுள்ளன.