Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, July 9, 2019

தனியார் பள்ளிகளை மிஞ்சும் அரசு பள்ளிகள்! முதலமைச்சரின் அதிரடி அறிவிப்பு!


சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 110-வது விதியின் கீழ் ஒரு அறிக்கை வாசித்தார். அதில் அவர் பேசுகையில், "அரசு பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில், நடப்பாண்டில் 124 கூடுதல் வகுப்பறைகள், 83 அறிவியல் ஆய்வகங்கள், 85 நூலக அறைகள், 84 கலை மற்றும் கைவினை அறைகள், 50 கணினி அறைகள், 92 மாணவர் கழிப்பறைகள், 104 மாணவியர் கழிப்பறைகளை புதிதாக கட்டுதல், மேலும் 1,475 மாணவர் கழிப்பறைகளையும், 1,849 மாணவியர் கழிப்பறைகளையும் பழுது பார்த்தல், 149 பள்ளிகளுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்துதல், 132 பள்ளிகளுக்கு 4,493 மீட்டர் நீளமுள்ள சுற்றுச்சுவர் எழுப்புதல், 1,649 மாற்றுத்திறன் மாணவர்களுக்கான கழிப்பறைகள்

அமைத்தல், சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்கென கைப்பிடியுடன் கூடிய 5,726 சாய்வு தளங்கள் அமைத்தல் போன்ற பணிகள் 163 கோடியே 45 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும். காலத்திற்கு ஏற்றவாறு மாற்றங்களை புகுத்தி, 12ம் வகுப்பு வரையிலான கலைத் திட்டம் மற்றும் பாடத் திட்டங்கள் திருத்தி அமைக்கப்பட்டுள்ளன. திருத்தியமைக்கப்பட்ட பாடத் திட்டம் மற்றும் கலைத் திட்டத்தின்படி 2,3,4,5,7,8,10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான புதிய பாடப் புத்தகங்கள் 2019-20ம் கல்வியாண்டின் பயன்பாட்டிற்கென அரசால் தயாரிக்கப்பட்டு உள்ளது.


அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மற்றும் மாணவியரின் பாதுகாப்பினை உறுதி செய்ய, 2,650 அரசு மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் 244 அரசு உயர்நிலைப்பள்ளிகளில் பள்ளி ஒன்றிற்கு 75 ஆயிரம் ரூபாய் வீதம் 21 கோடியே 71 லட்சம் ரூபாய் செலவில் கண்காணிப்பு கேமரா வசதி அமைத்துத் தரப்படும். அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் காலணிகளுக்குப் பதிலாக, 2020-21ம் கல்வியாண்டு முதல் ஷூ மற்றும் சாக்ஸ், 10 கோடியே 2 லட்சம் வரை கூடுதல் தொகை வழங்கப்படும். இதனால் 28 லட்சத்து 64,885 மாணவ, மாணவியர் பயன் பெறுவர். தேசிய தர மதிப்பீட்டு சான்றிதழ் பெறும் வகையில், மேலும் 10 அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் 54 கோடி ரூபாய் செலவில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கும்.


கொடைக்கானலில் உள்ள அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் 10 வகுப்பறை கட்டடங்கள், கருத்தரங்கு கூடம் மற்றும் பொது கருவிமயமாக்கல் ஆய்வுக் கூடம், சுற்றுச்சுவர், துணைவேந்தர், பதிவாளர், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர், நிதி அலுவலர் மற்றும் கல்விசார் பணியாளர்களுக்கான குடியிருப்புகள் 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும். பரமக்குடியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள ராஜூஸ் கல்லூரி ஆகியவற்றை முன்மாதிரி கல்லூரிகளாக மேம்படுத்தி, அதில் புதிதாக இளங்கலை, முதுகலை பாடப்பிரிவுகள் தோற்றுவித்தல், புதிதாக வகுப்பறைகள் கட்டுதல்,


இருக்கும் வகுப்பறைகளை புதுப்பித்தல், புதிய ஆய்வுக்கூடம் கட்டுதல், ஆய்வுக்கூடத்தை புதுப்பித்தல், கணினி மயமாக்கப்பட்ட நவீன நூலகம் அமைத்தல், போன்ற பணிகள் தலா 4 கோடி ரூபாய் வீதம் 8 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சிகளை உலக தரத்திற்கு மேம்படுத்த அதிநவீன உபகரணங்களுடன் கூடிய ஒரு மையம் 20 கோடியில் நிறுவப்படும். அதேபோல் பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, பல்கலைக்கழக அறிவியல் கருவிமயமாக்கல் மையம் 5 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.