சென்னை: வட்டார கல்வி அலுவலர் பணிக்கான போட்டித் தேர்வு 14ம் தேதி நடப்பதை அடுத்து ஆசிரியர் தேர்வு வாரிய இணையத்தில் ஹால்டிக்கெட்டு வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இயங்கி வரும் வட்டார கல்வி அலுவலகங்களில் 2018-2019ம் ஆண்டில் ஏற்பட்ட காலிப் பணியிடங்களில் புதிய நபர்களை நியமிப்பதற்கான கணினி வழிப் போட்டித் தேர்வுகள் 14, 15 மற்றும் 16ம் தேதிகளில் நடக்கிறது.
இந்த தேர்வு காலை, மதியம் என இரண்டு கட்டமாக நடக்கிறது. தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள நபர்களுக்கு அந்தந்த மாவட்டத்துக்கான அனுமதி சீட்டுகள் ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளமான www.trb.tn.nic.in ல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு எழுத உள்ளவர்கள் தங்கள் பயனீட்டு சொல் மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்தி 7ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்யும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் தேர்வு மையத்தின் மாவட்டம், நகரம் மட்டுமே அறிந்து கொள்ளும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு எழுத உள்ள நபர்கள் தேர்வு நாளுக்கு மூன்று நாட்களுக்கு முன்னர் தேர்வு மையத்தின் பெயரை தெரிந்து கொள்ளும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வு எழுத உள்ளவர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் தங்கள் பயனீட்டு சொல், கடவுச் சொல் ஆகியவற்றை பயன்படுத்தி தேர்வு மையத்தின் பெயர் மற்றும் முகவரியை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். தேர்வு மையம் கு றிப்பிட்டுள்ள அனுமதிச் சீட்டை கண்டிப்பாக பதிவிறக்கம் செய்து தேர்வு எழுதும் நாளில் தேர்வு எழுதும் மையத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும். 14,10ம் தேதி, 15ம் தேதி நடக்கும் தேர்வுக்கு 11 ம் தேதியும், 16ம் தேதி நடக்க உள்ள தேர்வுக்கு 12ம் தேதியும் அனுமதிச் சீட்டு வெளியிடப்படும்.