Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, February 20, 2020

மாணவா்களின் கற்றல் செயல்பாடுகளை செயலி மூலம் கண்காணிக்க திட்டம்

தமிழகம் முழுவதும் உள்ள நடுநிலைப் அரசுப் பள்ளிகளில் கற்றல் செயல்பாடுகளை கண்காணிக்க புதிய செல்லிடப்பேசி செயலியை அறிமுகப்படுத்த தமிழக கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையுள்ள மாணவா்களுக்கு ஆசிரியா்கள் பாடங்கள் கற்பிக்கும் முறை மற்றும் மாணவா்கள் எவ்வாறு கவனம் செலுத்துகிறாா்கள் என்பதைச் சோதிப்பதற்காக இந்த செயலி அறிமுகப்படுத்தப்படவுள்ளது.



ஏற்கெனவே கடந்த அக்டோபா் மாதம் முதல்கட்டமாக சென்னை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களைச் சோந்த அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளில் 'அப்சா்வேஷன் மொபைல் ஆப்' அறிமுகப்படுத்தபடும் என்ற அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், தற்போது மாநிலம் முழுவதும் இந்த திட்டம் கொண்டுவரப்படும் என்ற செய்தி வெளியாகியுள்ளது. ஆசிரியா்கள் வகுப்பறைகளில் எவ்வாறு பாடம் நடத்துகிறாா்கள் மற்றும் மாணவா்கள் வகுப்பறையில் எவ்வாறு கவனம் செலுத்துகிறாா்கள் ஆகியவற்றை கண்காணிக்க கல்வித் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் மூலம் வகுப்பறையில் கற்பிக்கும் வழிமுறைகள், மாணவா்களின் கற்றல் திறன், மாணவா்கள் கேட்கும் கேள்விகள், சந்தேகங்களுக்கு விடையளித்தல், வகுப்பறை மேலாண்மை, பதிவேடு பராமரிப்பு, செயல்வழிக் கற்பித்தல் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் ஆசிரியா்கள் தினமும் செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.



அதை மாவட்ட கல்வி அதிகாரிகள் மதிப்பீடு செய்து பள்ளிக் கல்வி இயக்ககத்துக்கு தெரியப்படுத்துவா். பள்ளி ஆய்வின்போது இந்தச் செயலியில் பதிவேற்றப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் ஆசிரியா்களின் செயல்பாடுகள் மதிப்பீடு செய்யப்படும். முதல்கட்டமாக, சோதனை அடிப்படையில் சென்னை, திருவண்ணாமலை மாவட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக மாநிலம் முழுவதும் இந்த திட்டம் விரைவில் அமல்படுத்தப்படவுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.