சென்னை: தமிழகத்தில் நடப்பாண்டிற்கான பிளஸ்-2 தேர்வு நாளை துவங்குகிறது. இத்தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 7,276 மேல்நிலைப் பள்ளிகளிலிருந்து 8,16,359 மாணவர்கள் எழுதுகின்றனர். இதையொட்டி தேர்வறையில் ஆசிரியர்கள் செல்போன் வைத்திருக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. 2019-2020ம் கல்வியாண்டிற்கான மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் நாளை (02.03.2020) தொடங்கி 24.03.2020 வரை நடைபெறவுள்ளது. காலை 10.00 மணி முதல் மதியம் 01.15 மணி வரை இத்தேர்வு நடக்கிறது. இத்தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 7,276 மேல்நிலைப் பள்ளிகளிலிருந்து 8,16,359 மாணவர்கள் எழுதுகின்றனர்.
இதில் 19,166 தனித்தேர்வர்கள் தேர்வெழுதவுள்ளனர். பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் என மொத்தத்தில் 8,35,525 பேர் தேர்வெழுத உள்ளனர். இதில் மாணவியர் 4,41,612; மாணவர்கள் 3,74,747 ஆகும். 66,865 மாணவிகள், மாணவர்களைவிட கூடுதலாக தேர்வெழுதுகின்றனர். 3012 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு மட்டும் கூடுதலாக 68 புதிய தேர்வுமையங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளது. வேலூர், கடலூர், சேலம், கோவை, மதுரை, புதுக்கோட்டை, பாளையங்கோட்டை, திருச்சி மற்றும் புழல் சிறைகளிலுள்ள 62 ஆண் சிறைவாசிகள் புழல் சிறையில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தில் தேர்வெழுதவுள்ளனர்.
சுமார் 41,500 ஆசிரியர்கள் அறைக் கண்காணிப்பாளர் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மாற்றுத் திறனாளி தேர்வர்கள் 3,330 பேர் எழுதுகின்றனர். இதையொட்டி அனைத்துத் தேர்வு மையங்களுக்கும் தேவையான எண்ணிக்கையில் முதன்மை விடைத்தாள், கூடுதல் விடைத்தாட்கள் மற்றும் முகப்புச் சீட்டுகள் ஆகியவை அனுப்பி வைக்கப்பட்டுவிட்டன. இத்தேர்விற்காக 296 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் பாதுகாப்பான இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. அவ்விடங்களில் 24 மணி நேரஆயுதம் தாங்கிய காவலர் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சுமார் 4000 பறக்கும் படை மற்றும் நிலையான படை உறுப்பினர்கள் முதன்மைக் கல்வி அலுவலர்களால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர், கண்காணிப்புக் குழுவை அழைத்துக் கொண்டு தேர்வு மையங்களைப் பார்வையிட்டு முறைகேடுகள் ஏதுவும் நடைபெறாவண்ணம் தீவிரமாகக் கண்காணித்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் தேர்வறையில் தங்களுடன் அலைபேசியை வைத்திருப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தகவல் தொடர்பு சாதனங்களை வைத்திருப்பது கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வு 4ம் தேதி துவங்குகிறது. மொத்தம் 7400 மேல்நிலைப் பள்ளிகளிலிருந்து 8,26,119 மாணவர்கள் மற்றும் 6,356 தனித்தேர்வர்கள் என மொத்தத்தில் 8,32,475 பேர் புதிய பாடத்திட்டத்தில் தேர்வெழுத உள்ளனர்.
100 சிறைவாசிகளும் எழுதுகின்றனர். 10ம் வகுப்பு தேர்வு 27ம் தேதி துவங்குகிறது. மொத்தம் 12,687 பள்ளிகளிலிருந்து 9,45,006 மாணவர்கள் மற்றும் 10,742 தனித்தேர்வர்கள் என மொத்தத்தில் 9,55,748 பேர் புதிய பாடத்திட்டத்தில் தேர்வெழுத உள்ளனர். 144 சிறைவாசிகளும் எழுதுகின்றனர்.
No comments:
Post a Comment