தமிழக அரசு உயர் கல்வி துறையை மேம்படுத்த பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்திவருகிறது.
இந்தியாவிலேயே, உயர் கல்வி துறை மாணவர் சேர்க்கையில் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு விளங்கி வருகிறது.
சட்டப் பேரவையில் மாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் அறிவிப்புகள
தமிழ்நாட்டில் உள்ள 10 அரசு பொறியியல் கல்லூரி மற்றும் 45 அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் உள்ள கட்டடங்களை மேம்படுத்தவும், பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவும், முதல்கட்டமாக இந்த ஆண்டு 25 கோடி
ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
பொறியியல் மற்றும் பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் தேர்வு செய்யப்படும் 10 ஆயிரம் மாணாக்கர்கள், தொழிலகங்களில் கள அனுபவம் பெற்று, தங்கள் தொழில்நுட்பத் திறனை மேம்படுத்திக் கொள்ள ஒரு மாணாக்கருக்கு 15 ஆயிரத்து 600 ரூபாய் வீதம் நிதி உதவி வழங்க, 16 கோடியே 60 லட்சம் ரூபாய்
ஒதுக்கீடு செய்யப்படும்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் மற்றும் பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில், உயர் மின் அழுத்த பகிர்மான அமைப்பை சிறப்பான முறையில் இயக்கி பராமரிக்க, 6.33 கோடி ரூபாய் தொடர் செலவினத்தில், 61 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும்.
ஆசியாவிலேயே முதன்முதலாக துவங்கப்பட்ட பெருமைக்குரிய, சென்னை, சைதாப்பேட்டை கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தின் கட்டடம் 18ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இப்புராதனக் கட்டடத்தினை, அதன் தொன்மை மாறாமல் புனரமைக்க, 1020 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும்.
1840ஆம் ஆண்டு துவங்கப்பட்டு, தேசிய கல்லூரிகள் கட்டமைப்பில், நாட்டிலேயே 3ஆம் இடத்தில் உள்ள சிறப்பு வாய்ந்த சென்னை, மாநிலக் கல்லூரியின் பழமை வாய்ந்த பல கட்டடங்களும், கல்லூரி முதல்வர் குடியிருப்பும், அதன் தொன்மை மற்றும் அழகு மாறாமல், 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைத்து பாதுகாக்கப்படும்.
பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணாக்கர்களின் ஆராய்ச்சித் திறனை மேம்படுத்தும் வகையில், மின் வாகனங்கள் தொழில்நுட்ப ஆராய்ச்சிக்காக அண்ணா பல்கலைக்கழகத்திற்கும், சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான ஆராய்ச்சிக்காக அண்ணாமலை பல்கலைக் கழகத்திற்கும், சுகாதாரம் மற்றும் ஆற்றல் தொடர்பான ஆராய்ச்சிக்காக பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கும் புற்றுநோய் ஆராய்ச்சிக்காக பாரதியார் பல்கலைக் கழகத்திற்கும், உயிர் மருத்துவம் தொடர்பான ஆராய்ச்சிக்காக மதுரை காமராசர் பல்கலைக் கழகத்திற்கும், உயிர் மருத்துவ பயன்பாடுகள் குறித்த ஆராய்ச்சிக்காக சென்னை பல்கலைக்கழகத்திற்கும் தலா 35 கோடி ரூபாய் வீதம், மொத்தம் 210 கோடி ரூபாய் நிதி வழங்கப்படும்.
ஆண்டுதோறும் உயர் கல்வியில் சேரும் மாணாக்கர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு கூடுதல் வகுப்பறைகள் மற்றும் ஆய்வகக் கட்டடங்கள் கட்டவும், கணினி மற்றும் உபகரணங்கள் மற்றும் மர தளவாடங்கள் வாங்கவும் 150 கோடி ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
No comments:
Post a Comment