எளிமையாக கற்பித்தலில் ஆசிரியரின் பங்கு

எளிமையாக கற்பித்தலில் ஆசிரியரின் பங்கு

மனித எண்ணங்களையும், உணர்வுகளையும் எடுத்துச் சென்று, வெளிப்படுத்தும் கருவியாக மொழியமைகிறது. மனிதன் முதலில் மொழியில் ஒழுங்கில்லாமல் தான் பேசிக்கொண்டு இருந்தான். நாளடைவில் அவன் மதி நுட்பத்திற்கேற்ப அவனைத் திருத்திக்கொண்டு மற்றவர்களுக்கும் கற்று கொடுக்கும் முயற்சியில் இறங்கினான். கற்றல், கற்பித்தல் தொடர்பான சிந்தனைகள் இந்தியப் பண்பாட்டில் வேத காலம் தொடங்கியே ஏற்பட்டுவிட்டது. எந்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? தவறுதலாக உச்சரித்தால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பதை நமக்கு வேதங்கள் தெளிவுபடுத்துகின்றன. ஆசிரியர் மாணவர்களுக்கிடையேயுள்ள உறவுநிலையை உபநிடதங்கள் கூறுகின்றன. கற்றல் கற்பித்தலில் முக்கிய பங்குவகிப்பவர்கள் மாணவரும் ஆசிரியருமே. எனவே கற்பித்தலை எளிமையாக்குவதின் மூலம் மாணவர்களின் திறன்களை எவ்வாறு வெளிக்கொணர முடியும் என்பதை ஆய்வுப் பொருளாகக் கொண்டு இக்கட்டுரை அமைகிறது.

கேட்டல் திறன்:

நான்குவகைத் திறன்களில் கேட்டல் திறனே மிகவும் இன்றியமையாத திறனாகும். இதனையேத் திருவள்ளுவர்,

"செல்வத்துட் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை" (குறள்: 157)

என்று குறிப்பிடுகிறார். ஒன்றைப் படித்துத் தெளிவதைவிட கேட்டு தெளிவதே பயனுள்ளதாக இருக்கும். குழந்தை வயிற்றில் இருக்கும்போதே கேட்கும் திறனைப் பெற்றுவிடுகிறது. அந்தக் குழந்தை பேசுவதற்கு வேண்டுமேயானால் நாட்கள் ஆகுமே தவிர அதுவரை கேட்டல் என்ற ஒரு திறனை அது வளர்த்துக்கொண்டேதான் வரும். "ஆசிரியர் பேசும்போது மாணவர் கேட்கின்றனர். கேட்கின்றவர் எல்லோரும் மிகக் கவனமுடன் அல்லது கூர்மையுடன் கேட்பதாகச் சொல்ல இயலாது. ஏனெனில் ஆசிரியர் பேச்சின் கருத்து மிகக் கடினமானதாக அல்லது பேசப்படும் பொருள் மாணவர்களின் அனுபவத்திற்கு அப்பாற்பட்டதாக இருக்கலாம். எனவே கேட்பவரின் திறன் மாறுபட இடமுண்டு. அதோடு அறிவாற்றலுக்கு ஏற்பக் கேட்கும் திறனிலும் வேறுபாடு உண்டு" என்று கூறுகிறார் சு. இராசாராம்.

பிறர் படிக்கும் போதும் பேசும்போதும் என்ன என்பதை செவிமடுத்து ஒருவர் கேட்க முற்படும்போது அதுவே அவரின் அறிவு வளர்ச்சிக்கு அடிப்படையாகும். எனவே இராமலிங்க வள்ளலார் படித்தாலும் படிக்கப் பக்க நின்று கேட்டாலும் இனிப்பவன் இறைவன் என்கிறார். ஆசிரியர்கள் வாசிக்கும் போது மாணவனைத் தன்வயப்படுத்தி எளிமையான சொற்களைச் சொல்லும்போது அவன் செவிமடுத்து கேட்பான். மாணவரின் புரிதல் திறனுக்கேற்ப பாடல்கள் பாடியோ அல்லது ஒரு சொல் சொல்லி அதற்கு எதிர்ச்சொல் என்னவாக இருக்கும் என மாணவனை யூகிக்க வைக்கவேண்டும். ஆசிரியர் மாணவர்களுக்கிடையே ஒரு தொடர்ச்சி சங்கிலிப் பிணைப்பு இருந்தால் தான் கேட்டல் திறன் முழுமைப்பெறும் என்பதில் ஐயமில்லை. டாக்டர் எம்.எஸ். திருமலை கேட்கும் திறன் என்பது தனிப்பட்டவர்களின் மனநிலை, விருப்பு, வெறுப்பு, ஆர்வம் ஆகியவற்றைப் பொறுத்தும், தனிப்பட்டவர்களின் திறமை, அவர்களின் உடல், மனநிலையில் உள்ள குறைபாட்டைப் பொறுத்தும் உள்ளது என்கிறார். நல்ல மாணவனாக ஒருவன் திகழ்வதற்கு கேட்டல் திறனே முதல்படியாக அமைகிறது என்பது ஆய்வாளர்களின் ஒருங்கிணைந்த கருத்தாக அமைகின்றது.

வாசித்தல் பழக்கம்:

பாடத்திட்டத்தில் உள்ள பாடப்புத்தகத்தை மட்டும் படிக்கும் மாணவனை மற்றப் புத்தகங்களையும் படிக்க வைப்பதற்கு தூண்டுகோலாக ஆசிரியர் விளங்கவேண்டும். கதைப்புத்தகங்கள், நாளிதழ்கள் போன்றவற்றை வாசிப்பதற்கு ஆர்வங்காட்டுவதால் மாணவர்கள் பொது அறிவை வளர்த்துக் கொள்வதோடு, பிழையின்றி வாசிக்கவும், எழுதவும் முடிகிறது. தினந்தோறும் வகுப்பிலேயே ஒரு ஐந்து நிமிடம் ஒதுக்கி இன்றையச் செய்திகளை வாசிக்க வைக்கும்போது மாணவர்களிடையே ஒரு உந்துதல் ஏற்பட்டு அவனைவிட நாம் நன்றாக வாசிக்க வேண்டும் என்று அறிவுப்போட்டி ஏற்படும். வாசித்தலின் போதே ஆசிரியர் எந்த இடத்தில் ஏற்றி இறக்கி வாசிக்க வேண்டும் என்று சொல்லும்போது மாணவரின் மனதிலும் நன்றாகப் பதியும். வாசிக்கும்போது சந்திப்பிழை, ஒற்று மிகுதல் ஒற்று மிகாதல் பேன்ற இலக்கண குறிப்புகளையும் ஆசிரியர் சொல்லிக் கொண்டே வந்தால் நாளடைவில் மாணவன் பிழையின்றி வாசிக்கவும் அதன்மூலம் எழுதவும் முடியும். நூல் வாசிக்கும் பழக்கம் இல்லையெனில் அவர்களது அறிவை விரிவுபடுத்த முடியாது. ஏதாவது ஒரு தலைப்பில் கட்டுரை எழுதச் சொன்னால் அவர்கள் வார்த்தையைத் தேடுவர். அவர்களிடத்தில் சொல்லாட்சித்திறன் இல்லாமல் போய்விடும். மாணவர்களிடத்தில் சொல் வளத்தைப் பெருக்குவதற்கு அவர்களுக்கு பிடித்தமான கதையைச் சொல்லி அதன் பின்பு அக்கதையின் சுருக்கத்தை எழுதச் சொல்லும்போது அவனுடைய சொந்த முயற்சி வெளிப்படும். எனவே ஆசிரியர் வாசித்தல் பழக்கத்தை ஏற்படுத்தும் போது சிறந்த மாணவனை உருவாக்க முடியும்.

இலக்கணம் கற்பித்தல்:

மொழியைப் பிழையின்றிப் பேசுவதற்கும் எழுதுவதற்கும் இலக்கணம் பயன்படுகிறது. சொற்களை விளக்கும் கருவியாக இலக்கணம் அமைகிறது. "இலக்கணம் என்பது பழைய மொழிக்கு விளக்கம் கூறும் மரபிலக்கண நூற்களின் செய்திகள் மட்டுமல்ல. அன்றாடம் நாம் பேசும் எழுதும் மொழியின் அமைப்பையும் ஒழுங்கு நெறியையும் கூறுவதாகும்". இலக்கணத்தை கற்பிக்கும் ஆசிரியன் மாணவரிடத்தில் பயத்தை உண்டு பண்ணுதல் கூடாது. இன்றைய சூழ்நிலையில் குருட்டு மனப்பாடம் செய்ய வைத்து அவர்களுக்கு புரிதல் திறனே இல்லாமல் செய்துவிடுகின்ற போக்கே நிலவி வருகின்றது. இலக்கண ஆசிரியர் பாடம் கற்பிக்கும் போது அந்தக் கால மொழிச் சூழலை மாணவர்களுக்குக் கற்றுக் கொடுத்து அதன்மூலம் அக்கால மொழிப் பயன்பாடு எவ்வாறு இருந்தது? அந்த மொழிக்குரிய இலக்கணம் இவையென்று தெளிவுபடுத்த வேண்டும். காலந்தோறும் மொழியானது மாறுதலுக்குட்பட்டது. எனவே மரபிலக்கணத்தைச் சொல்லி கொடுக்கும்போதே, தற்போது மொழியின் நிலை என்ன என்பதையும் விளக்கி மாணவர்களுக்கு வேறுபாட்டை உணரும் திறனை ஏற்படுத்த முடியும்.

மரபிலக்கண நூல்கள் தம் காலத்திய பேச்சு வழக்கு, செய்யுள் வழக்கு ஆகியவற்றின் இலக்கணமே கூறுகின்றன. தொல்காப்பிய பாயிரத்தில் வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின் என்ற தொடரால் குறிக்கின்றது. இவைத் தவிர பல நூற்பாக்களின் செய்திகள் இக்காலத் தமிழுக்கும் பொதுவானவைகளாகவே காணப்படுகிறது. மொழியை பிழையின்றி உச்சரிப்பதற்கு முதலில் மாணவனுக்கு பிறப்பியல் செய்திகளைக் கூற வேண்டும். எந்த எழுத்து எந்த இடத்தில் பிறக்கிறது என்பதை மாணவனே அறிந்து உச்சரிப்பதற்கு ஆசிரியர் வழிகாட்ட வேண்டும்.

மேலும் மாணவர்களின் வயது வரம்புக்குத் தகுந்தவாறு இலக்கணம் அமைய வேண்டும். குறிப்பாகத் தொடக்கக் கல்வி மாணவனுக்கு பெயர்ச்சொல், வினைச்சொல்லுக்குரிய வரையறைத் தெரிந்தாலே போதுமானது. அதைவிடுத்து பெயரெச்சம், வினையெச்சம், முற்று போன்ற இலக்கணக் கருவிச் சொற்களை கற்றுத்தரும் பொழுது மாணவனுக்கு இலக்கணத்தின் மீதே கசப்பு ஏற்பட்டுவிடுகிறது. எனவே இலக்கணம் பாடத்திட்டம் மாணவரின் புரிதல் திறனுக்கு ஏற்பவே அமைய வேண்டும். பாடத்தில் உள்ள உதாரணங்களை மட்டும் கூறாமல், மாணவனைச் சிந்திக்க வைத்து உ‘ரணங்கள் கூறிய பின் இத்தொடரில் பெயர்ச்சொல் எது வினைச்சொல் எது என அவர்கள் கண்டறிவதற்கு நாம் சோதனை நடத்த வேண்டும்.

கற்பித்தலின் தரம்:

ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கற்பிக்கும்போது தெரிந்த ஒன்றைச் சொல்லி தெரியாதவற்றை எளிய சொற்களின் மூலம் விளக்குதல் வேண்டும். ஆசிரியர் குறிப்பிட்ட கால எல்லைக்குள் பாடத்திட்டத்தில் உள்ள பாடத்தை முடிக்கவேண்டும் என்று அவசர அவசரமாய்ச் செல்லாமல் மாணவரின் புரிதல் திறனுக்கேற்றபடி பாடத்தை நடத்திச் செல்ல வேண்டம். முதல் நாள் வகுப்பில் நடத்திய பாடத்தை மறுநாள் மாணவர்களுக்கு நினைவூட்டும் வகையில், அவர்களிடம் வினாக்களை எழுப்புவது, மாணவர்களுக்கு அந்தப் பாடத்தை பற்றிய அறிவு போதுமானதா இல்லையா என ஆசிரியர்கள் தீர்மானிப்பதற்கு வழி வகுக்கும். மேலும், மாணவனின் புரிதல் திறன் அதிகரிப்பதற்கு வண்ண எழுதுகோல்களினால் வரைந்த வரைபடங்கள் மற்றும் உபகரணங்கள் போன்றவற்றை ஆசிரியர் பயன்படுத்தலாம். மாணவன் பெரிய கவிஞனாக ஆகாவிட்டாலும் தமிழ்மொழியை பிழையில்லாமல் பேசவும் எழுதவும் கற்றுக் கொள்ளவேண்டும். மாணவன் படிக்கும், பயன்படுத்தும் மொழியில் சொல்வளம் அதிகமாக இருக்குமாறு பாடத்திட்டம் அமைய வேண்டும். சொற்களைக் கற்பிக்கும்போது அவன் வாழ்க்கையில் அன்றாடம் பயன்படக்கூடியவையாகவும், அனுபவத்திற்கு உட்பட்டவையாகவும் மொழி அமைய வேண்டும். மாணவனுக்கு சிறு சிறு கட்டுரை, கவிதை, சிறு நாடகங்கள் போன்றவற்றிற்கு வாய்ப்பு கொடுக்கும்போது அவனுடைய கற்பனையாற்றல் விரிவடைந்து எந்தச் சொல்லை எங்குப் பிரயோகிக்க வேண்டும் என்ற ஆற்றல் ஏற்படுகிறது. இறுதியாக மாணவன் பிழையின்றி பேசவும், எழுதவும், அவனுடைய கற்பனைத்திறனை அதிகரிக்கவும் ஆசிரயரே முழுப்பங்கு வகிக்கிறார். ஏனெனில் பெயர்சொல்லின் தன்மையைக் கூறி இது பெயர்ச்சொல் என்று விளக்குவதற்குக் கருவிமொழியைப் பயன்படுத்தி வழக்குச் சொல்லுக்கும், எழுத்துச்சொல்லுக்கும் உள்ள வேறுபாட்டை தெளிவுபடுத்துகிறார். எனவே இலக்கணத்தை முழுமையாக கற்றுகொண்டோமேயானால் எந்த ஒரு மொழியையும் எளிமையாக பேச, எழுத நம்மால் முடியும் என்பதில் ஐயமில்லை.

Share:

Categories