Search This Blog

Wednesday, January 31, 2018

100 சதவீத தேர்ச்சி பெற மாணவர்களுக்கு மாற்று சான்றிதழ் கொடுத்து அனுப்பினால் நடவடிக்கை

0 comments
தமிழகத்தில் வரும் மார்ச் மாதம் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. பிளஸ்-1 வகுப்புக்கு இந்த ஆண்டு முதல் பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. தேர்வு அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்டு உள்ளது.
சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனரகத்தில் இயக்குனர் எஸ்.கண்ணப்பன் தலைமையில் மாவட்ட மெட்ரிகுலேஷன் பள்ளிக்கூட ஆய்வாளர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் முடிந்ததும் இயக்குனர் எஸ்.கண்ணப்பன் நிருபர்களிடம் கூறியதாவது:-
மார்ச் மாதம் தொடங்க உள்ள எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 தேர்வுகளை வழக்கம்போல நேர்மையான முறையில் நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கண்காணிக்க வேண்டும்.
மாற்றுச்சான்றிதழ்
சில மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் 100 சதவீத தேர்ச்சி பெறவேண்டும் என்ற நோக்கத்தில் தேர்வில் தோல்வி அடையும் நிலையில் உள்ள சரியாக படிக்காத மாணவர்களுக்கு மாற்று சான்றிதழ் (டி.சி.) கொடுத்து அனுப்புவது வழக்கமாக உள்ளது. அந்த மாணவர்களை அரசு பள்ளிகளில் சேர்த்து விடுவார்கள் அல்லது தனித்தேர்வர்களாக தேர்வு எழுதுவார்கள்.
அவ்வாறு மாற்றுச்சான்றிதழ் கொடுக்காமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் ஆய்வாளர்கள் கண்காணிக்க வேண்டும். எந்த பள்ளியிலாவது அப்படி மாற்று சான்றிதழ் கொடுத்தால் அந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவ-மாணவிகளுக்கு மனஉளைச்சல் ஏற்பட்டால் அவர்களுக்கு பயிற்சி அளிக்க முதலில் ஆசிரியர்களுக்கு தேவையான பயிற்சி அளிக்கப்படும்.
இவ்வாறு இயக்குனர் எஸ்.கண்ணப்பன் கூறினார்.