Search This Blog

Sunday, June 17, 2018

எம்.பி.பி.எஸ். விண்ணப்பம்: தேர்வுக் குழுவுக்கு சென்றதை உறுதி செய்யலாம்

0 comments



தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புக்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மருத்துவக் கல்வி தேர்வுக்குழுவுக்கு சென்று சேர்ந்துவிட்டதா என்பதை உறுதி செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் தமிழகத்தில் ஜூன் 11-ஆம் தேதி தொடங்கியது. அரசு மருத்துவக் கல்லூரி இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள், தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் ஆகியவற்றுக்கு மருத்துவக் கல்வி இயக்ககம் கலந்தாய்வை நடத்த உள்ளது.



இதற்காக 23 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் விண்ணப்ப விநியோகம் நடைபெற்று வருகிறது. இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யும் வசதியும் உள்ளது.

6-ஆம் நாள்: விண்ணப்ப விநியோகத்தின் 6-ஆம் நாளான சனிக்கிழமை அரசு இடங்களுக்கு 61, நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 22 என மொத்தம் 83 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன. ஒட்டுமொத்தமாக ஆறு நாள்கள் விநியோகத்தின் முடிவில் 36 ஆயிரத்து 859 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையும் (ஜூன் 17) விநியோகம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை நேரில் பெறவும், இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யவும் திங்கள்கிழமை (ஜூன் 18) கடைசியாகும்.



சென்று சேர்ந்ததா?: பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்ககத்துக்கு சென்று சேர வரும் செவ்வாய்க்கிழமை (ஜூன் 19) கடைசியாகும். பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் சென்று சேர்ந்ததை மாணவர்கள் உறுதி செய்யும் வகையிலான வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான இணைப்பு www.tnmedicalselection.org என்ற இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ளது. அந்த இணைப்பின் உள் சென்று விண்ணப்பப் படிவத்தின் எண் அல்லது 2018-ஆம் ஆண்டு நீட் தேர்வின் வரிசை இவற்றில் ஏதாவது ஒன்றைப் பதிவு செய்து, விண்ணப்பத்தின் நிலையை அறிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.