JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Friday, June 15, 2018

வேளாண்மை பல்கலைக்கழகத்தில் முதுநிலை படிப்புக்கான மாணவர் சேர்க்கை




கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டப் படிப்புகளில் சேருவதற்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 2018-19 கல்வி ஆண்டுக்கான முதுநிலை பட்டப் படிப்பு மாணவர் சேர்க்கை, முதுநிலை பட்டப் படிப்பில் 33 துறைகளிலும், முனைவர் பட்டப் படிப்பில் 28 துறைகளிலும் ஒருங்கிணைந்த முனைவர் பட்டப் படிப்பில் 4 துறைகளிலும், பகுதி நேர முனைவர் ஆராய்ச்சி பட்டப் படிப்பில் 28 துறைகளிலும் வழங்கப்பட உள்ளது.

மேற்கண்ட முதுநிலை பட்டப் படிப்புகள், கோவையிலுள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்துக்கு உள்பட்ட உறுப்புக் கல்லூரிகளான மதுரை, திருச்சி, குமுளூர், கிள்ளிகுளம், பெரியகுளம், மேட்டுப்பாளையம் கல்லூரிகள் மூலமாக வழங்கப்படுகிறது. மாணவர் சேர்க்கைக்கு பல்கலைக்கழக இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.




மாணவர்கள் படிவங்களைப் பதிவிறக்கம் செய்து, உரிய கட்டணம் செலுத்தி, தேவையான ஆவணங்களை இணைத்து அனுப்ப வேண்டும்.
முதுநிலை பட்ட மேற்படிப்புக்கான விண்ணப்பங்களை ஜூலை 11-ஆம் தேதிக்குள்ளும், முனைவர் பட்ட மேற்படிப்புக்கான விண்ணப்பங்களை ஜூலை 13-ஆம் தேதிக்குள்ளும் அனுப்ப வேண்டும்.

மாணவர் சேர்க்கை தொடர்பான அனைத்துத் தகவல்களும் மின்னஞ்சல் மூலமாகவே தெரிவிக்கப்படும் என்பதால், விண்ணப்பதாரர்கள் தங்களது மின்னஞ்சல் முகவரி, செல்லிடப்பேசி எண் ஆகியவற்றை சரியாகப் பதிவு செய்ய வேண்டும்; பல்கலைக்கழக இணையதளத்தை தினமும் தவறாமல் பார்க்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.