JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Wednesday, August 1, 2018

பத்தாம் வகுப்பு சிறப்பு துணை தேர்வு முடிவு இன்று வெளியீடு

பத்தாம் வகுப்பு சிறப்பு துணைப் பொதுத் தேர்வு எழுதியவர்கள் தங்களுக்கான தேர்வு முடிவுகளை புதன்கிழமை தெரிந்து கொள்ளலாம் என்பதோடு, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களையும் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.




இது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட செய்தி: கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு சிறப்பு துணைப் பொதுத் தேர்வில் பங்கேற்ற தேர்வர்கள், தங்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழை www.dge.tn.nic.in என்ற இணையதளத்திலிருந்து தங்களுடைய பதிவெண், பிறந்த தேதியைப் பதிவிட்டு புதன்கிழமை முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மறுகூட்டல்: மதிப்பெண் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித் தேர்வர்கள் உரிய முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்துக்கு ஆகஸ்ட் 2, 3 ஆகிய இரண்டு நாள்களில் நேரில் சென்று உரிய கட்டணம் செலுத்தி பதிவு செய்யவேண்டும். மறுகூட்டலுக்கு இரண்டு தாள்கள் கொண்ட மொழிப் பாடத்துக்கு ரூ. 305 வீதமும், பிற பாடங்களுக்கு ரூ. 205 வீதமும் கட்டணம் செலுத்த வேண்டும்.




இந்த விண்ணப்பத்தைச் சமர்ப்பித்த பின்னர் வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டில் இடம்பெற்றிருக்கும் விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தியே, மறுகூட்டல் முடிவுகளைத் தெரிந்துகொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.