JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Sunday, August 19, 2018

நீட் தேர்வு: சாதியை மாற்ற முடியாது!

நீட் தேர்வு மனுவில் சாதி குறித்து ஒருமுறை பதிவு செய்தால் அதை மாற்ற முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பிடிஎஸ் மாணவி ஒருவர் வழக்கு ஒன்றை சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ளார். அந்த வழக்கில் மாணவி கூறுகையில், தான் பிற்படுத்தப்பட்ட நாகராம் செட்டி என்ற சமூகத்தை சார்ந்தவர் என்றும் இச்சமூகத்தை நீட் தேர்வு மனுவில் குறிப்பிட தவறி விட்டதாகவும் அதனால் அச்சமூகத்திற்குரிய பயனைப் பெற முடியவில்லை. எனவே தனது சமூகத்தின் அடிப்படையில் ஆர்விஎஸ் பல் மருத்துவக் கல்லூரியில் கல்வியைத் தொடர அனுமதிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.



மாணவியின் மனுவைப் பரிசீலித்த நீதிமன்றம் மாணவி நீட் தேர்வில் தனது சமூகத்தைக் குறிப்பிட தவறினால் அவர் அதை விரும்பவில்லை என்றே பொருள். இனி அதை மாற்ற முடியாது. கல்லூரியில் அனுமதிக்கப்படும்போது அவர் தன்னுடைய சாதிச் சான்றிதழைப் பின்னாளில் தருவதாக உறுதி அளித்திருந்தார். ஆனால், அவருடைய பெயர் தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலில் இடம் பெறவில்லை. அதனால் அவருக்கு இடம் அளிக்கும் உத்தரவானது வழங்கப்படவில்லை என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கல்லூரியானது முதலில் அவசியமான சான்றிதழ்களைப் பெறாமல் மாணவ மாணவிகளை அனுமதித்து விட்டு பின்னர் தவறுகளைச் சரி செய்கிறது. இது தவறான போக்காகும் இதுபோன்ற தவற்றை எந்தக் கல்லூரியாவது மேற்கொண்டால் அந்தக் கல்லூரிகளில் நிர்வாகத்திற்கான இடங்களை நிரப்ப அனுமதிக்க முடியாது என்று நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.