JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Friday, August 31, 2018

பணியில் இருக்கும் போது அரசு ஊழியர்கள் கண்டிப்பாக ஐடி கார்டு அணிய வேண்டும்: தமிழக அரசு உத்தரவு





தமிழக பணியாளர் மற்றும் சீர்திருத்தத் துறை செயலாளர் ஸ்வர்ணா, அனைத்து அரசுத் துறைகளின் செயலாளர்கள், தலைமைச் செயலகத்தின் அனைத்து துறைகள், அனைத்து துறைத்தலைவர்கள், மாவட்ட கலெக்டர்கள், அனைத்து மாவட்ட நீதிபதிகள், முதன்மை குற்றவியல் நடுவர்கள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய செயலாளர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:


அரசுத் துறைகளில் பணியாற்றும் அனைத்து அரசு ஊழியர்களும், அலுவலர்களும் அலுவலக நேரங்களில் கண்டிப்பாக அடையாள அட்டை அணிந்திருக்க வேண்டும் என அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு அரசு உத்தரவிட்டும், அது தொடர்பான அறிவுரை வழங்கியும் ஒரு சில துறைகளில் அடையாள அட்டை அணிவதை நடைமுறைப்படுத்தவில்லை என தெரியவருகிறது.


இதுதொடர்பாக சென்னை ஐகோர்ட்டும் தமிழக அரசின் அனைத்து அலுவலர்களும், ஊழியர்களும் அடையாள அட்டை அணியவேண்டும். பொதுமக்களை நேரடியாக சந்திக்கும் அனைத்து துறை அலுவலர்களும், ஊழியர்களும் அடையாள அட்டை அணிவதை 60 நாட்களுக்குள் உறுதி செய்யவேண்டும் என கடந்த 16ம்தேதி உத்தரவிட்டுள்ளது.


எனவே அனைத்து அரசு ஊழியர்களும் பணியின்போது கண்டிப்பாக அடையாள அட்டை அணிந்திருக்க வேண்டும். அவ்வாறு அடையாள அட்டை அணியாத ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து மாவட்ட கலெக்டர்களும், துறைத் தலைவர்களும் இதுதொடர்பாக தங்கள் சார் நிலை அலுவலர்களுக்கு உத்தரவிட்டு அடையாள அட்டை அணிவதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.