JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Monday, October 1, 2018

டெல்லி அருங்காட்சியகம் புதிய முயற்சி மகாத்மா காந்தி இதய துடிப்பை கேட்கலாம்


தேசத் தந்தை மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளையொட்டி, அவரது இதயத் துடிப்பை மக்கள் கேட்பதற்கான ஏற்பட்டை டெல்லியில் உள்ள தேசிய காந்தி அருங்காட்சியக நிர்வாகம் செய்துள்ளது.நாடு முழுவதும் நாளை மகாத்மா காந்தியின் 150வது பிறந்த தினம் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.



இதையொட்டி, டெல்லியில் உள்ள தேசிய காந்தி அருங்காட்சியகம் சார்பில் சிறப்பு புகைப்பட கண்காட்சி நடத்தப்படுகிறது. ‘அகிம்சை மற்றும் உலக அமைதி’ என்ற தலைப்பில் இந்த கண்காட்சி நடத்தப்படுகிறது.

இது குறித்து அருங்காட்சியக இயக்குநர் ஏ. அண்ணாமலை நேற்று கூறுகையில், ‘‘காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, காந்திஜி குறித்த ‘டிஜிட்டல் மல்டிமீடியா கிட்’ ஒன்றை வெளியிட உள்ளோம். இதில், காந்தியின் வாழ்க்கையின் பல்வேறு கால கட்டங்கள் குறித்த வீடியோ, ஆடியோ இடம் பெற்றுள்ளது. மேலும், காந்தி எழுதிய 20 புத்தகங்கள், அவரை பற்றி எழுதப்பட்ட 10 புத்தகங்கள், காந்தியின் சிறப்பான 100 புகைப்படங்கள், அவரது குரல் போன்றவை உள்ளன.



இந்தி, ஆங்கிலத்தில் உள்ள இந்த கிட் ₹300க்கு பார்வையாளர்களுக்கு வழங்கப்படும். மேலும் பல்வேறு நிலைகளில் எடுக்கப்பட்ட காந்தியின் இசிஜி,களை தொகுத்து, டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் அவருடைய இதய துடிப்பை உருவாக்கி இருக்கிறோம். இதை அருங்காட்சியகம் வரும் பார்வையாளர்கள் கேட்கலாம்’’ என்றார்